Published : 12 Oct 2021 04:05 PM
Last Updated : 12 Oct 2021 04:05 PM

2020-ம் ஆண்டில் போக்சோ சட்டத்தில் பதிவான குற்றங்களில் 99% பெண் குழந்தைகளுக்கு எதிரானவை: என்சிஆர்பி அதிர்ச்சித் தகவல்

கோப்புப்படம்

புதுடெல்லி

2020-ம் ஆண்டில் போக்சோ சட்டத்தில் பதிவான குற்றங்களில் 99 சதவீதம் பெண் குழந்தைகளுக்கு எதிரானவையாக உள்ளன. இதன் மூலம் சமூகத்தில் அதிகமாக பாதிக்கப்படும் பிரிவில் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) தெரிவித்துள்ளது.

உலக பெண் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நேரத்தில் இதுபோன்ற வேதனைக்குரிய தகவல் வெளியாகியுள்ளது.

போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வரை கிடைக்கும் என்று சட்டத்திருத்தம் கொண்டுவந்தபோதிலும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற எண்ணிக்கை குறையும் அளவு குறைவாக இருக்கிறது.

என்சிஆர்பி புள்ளிவிவரங்களை குழந்தைகள் உரிமை அமைப்பான சிஆர்ஒய் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. இதில் கடந்த 2020-ம் ஆண்டில் போக்சோ சட்டத்தின் கீழ் 28 ஆயிரத்து 327 குற்றங்கள் பதிவாகின. இதில் 28 ஆயிரத்து 50 குற்றங்கள் பெண் குழந்தைகளுக்கு எதிரானவை என்பது பெண் குழந்தைகளின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

இன்னும் ஆழமாக ஆய்வு செய்தால், 16 வயது முதல் 18 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கு எதிராக கடந்த ஆண்டில் 14 ஆயிரத்து 92 குற்றங்கள் நடந்துள்ளன. 12 முதல் 16 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கு எதிராக 10 ஆயிரத்து 499 குற்றங்கள் நடந்துள்ளன.

சிறுவர்கள், சிறுமிகள் இருவருமே பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறார்கள் என்றாலும், என்சிஆர்பி புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் சிறுவர்களைவிட, பெண் குழந்தைகளுக்கான பாதிப்புதான் அதிகமாக இருக்கிறது.

அதாவது, 2020-ம் ஆண்டுக்கான போக்சோ சட்டத்தில் பதிவான குற்றங்கள் குறித்து என்சிஆர்பி புள்ளிவிவரங்களில் 99 சதவீதக் குற்றங்கள் பெண் குழந்தைகளுக்கு எதிராகவே நடந்துள்ளன.

இதுகுறித்து குழந்தைகள் உரிமை அமைப்பான சிஆர்ஒய் அமைப்பின் இயக்குநர் பிரித்தி மஹாரா கூறுகையில், “குழந்தைகளுக்கான வன்முறையில் அதிகமாக பலியாவது, பாதிக்கப்படுவது பெண் குழந்தைகள்தான். இதை ஒதுக்கிவைத்துப் பார்க்கக்கூடாது.

கல்வி, சமூகப் பாதுகாப்பு, ஏழ்மை ஆகியவற்றோடு பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சவாலான சூழல் நிலவுகிறது. பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக கரோனா காலத்தில் ஏற்பட்ட பாதிப்பும் பெண் குழந்தைகளுக்கான பாதிப்பும் முக்கியமானது.

இந்தச் சிக்கலான நேரத்தில் பெண் குழந்தைகளுக்கு போதுமான கல்வி கிடைக்கவில்லை. வீட்டுக்குள் முடங்கும் சூழல் ஏற்பட்டது. குழந்தைத் திருமணத்துக்குள் தள்ளப்பட்டனர். அதுமட்டுமல்லால் இதுபோன்ற பாலியல் வன்முறை, பாலியல் சுரண்டல், துன்புறுத்தலுக்கும் பெண் குழந்தைகள் ஆளாகினர்.

ஆதலால், பெண் குழந்தைகளுக்கு எதிரான வலுவான பாதுகாப்பு முறையை உருவாக்குவது அவசியம். கடந்த சில ஆண்டுகளாக, பெண் குழந்தைகளுக்கான கல்விச் சூழல், பாதுகாப்பு முறைகள் வலிமை அடைந்து முன்னேற்றம் பெற்று வருகிறது. ஆனால், இவற்றை கரோனா தொற்று பாதித்துவிட்டது.

குறிப்பாக பெண் குழந்தைகள் படிப்பைப் பாதியிலேயே கைவிடுதல், பாதுகாப்புக் குறைபாடு, பாலியல் சீண்டல் போன்றவை கரோனாவுக்குப் பின் அதிகரித்துள்ளன. அதிலும் பதின்வயதில், வயதுவந்த பெண் குழந்தைகள் பல்வேறு வகையான பாதுகாப்புச் சிக்கல்களைச் சந்திக்கிறார்கள்''.

இவ்வாறு மஹாரா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x