Published : 01 Oct 2021 03:17 AM
Last Updated : 01 Oct 2021 03:17 AM
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை, நவ்ஜோத் சிங் சித்து சண்டிகரில் நேற்று சந்தித்துப் பேசினார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. இதன்காரணமாக கடந்த 18-ம் தேதி அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி கடந்த 20-ம் தேதி பதவியேற்றார்.
இந்த சூழலில் கடந்த 28-ம் தேதி பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்தார். பஞ்சாபின் எதிர்காலம், நலனில் என்னால் சமரசம் செய்து கொள்ள முடியாது. எனவே மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று சித்து விளக்கம் அளித்தார்.
பஞ்சாப் மாநில காவல் துறை தலைவர், மாநில தலைமை அரசு வழக்கறிஞரை மாற்ற வேண்டும் என்று சித்து பகிரங்கமாக வலியுறுத்தி வருகிறார். சித்துவை சமாதானப்படுத்த தன்னை சந்திக்க வருமாறு முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அழைப்பு விடுத்தார். இதை ஏற்று சண்டிகரில் நேற்று மாலை முதல்வரை சித்து சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது.
சந்திப்புக்கு பிறகு இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டிஅளிப்பார்கள் என்று கூறப்பட்டது.ஆனால் பல்வேறு விவகாரங்களில் முதல்வருக்கும் சித்துவுக்கும்கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்று தெரிகிறது. இதன்காரணமாக நிருபர்கள் சந்திப்பு நடைபெறவில்லை. எனினும் சித்துவின் சில கோரிக்கைகளை ஏற்று மூத்த அரசு அதிகாரிகள் மாற்றம் செய்யப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “அட்டர்னி ஜெனரல், டிஜிபியை நியமிக்கும் உரிமை முதல்வருக்கு உள்ளது. இதில் வேறு யாரும் தலையிட முடியாது" என்று சித்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாபில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸில் உட்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT