Published : 13 Sep 2021 03:13 AM
Last Updated : 13 Sep 2021 03:13 AM

வங்கதேச எல்லை அருகே ரூ.57 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல்

சிலிகுரி

எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மேற்கு வங்க மாநிலம் தக்சின் தினஜ்பூர் மாவட்டத்தில் இந்திய-வங்கதேச எல்லை பகுதியில் 137-வது பிஎஸ்எப் படைப் பிரிவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள டோங்கி கிராமத்தில் புதிதாக ஒரு வீடு கட்டப்பட்டு வருகிறது. அங்கு சந்தேகத்தின் பேரில் வீரர்கள் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு பையில் 3 ஜார்கள் இருந்தன. ‘மேட் இன் பிரான்ஸ்’ என அச்சிடப்பட்டிருந்த அந்த ஜார்களை பறிமுதல் செய்து திறந்து பார்த்தபோது, பாம்பு விஷம் இருந்தது. தூள், கட்டி, திரவ வடிவில் இருந்த இதன் சந்தை மதிப்பு ரூ.57 கோடி ஆகும். பின்னர் அவற்றை மண்ணில் புதைத்துவிட்டோம்.

இந்த பாம்பு விஷம் பிரான்ஸிலிருந்து கொண்டுவரப்பட்டு வங்கதேசத்துக்கு கடத்த இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்தியா மூலம் சீனாவுக்கு கடத்தவும் கடத்தல்காரர்கள் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. சீனாவில் பாரம்பரிய மருந்து தயாரிக்க இந்த விஷம் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x