Published : 22 Feb 2016 03:15 PM
Last Updated : 22 Feb 2016 03:15 PM
மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவிட சச்சின் டெண்டுல்கர் விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது உதவியாளர் நாராயண் கண்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சச்சின் உதவியாளர் நாராயண் கண்ணன் பீட் மாவட்ட ஆட்சியர் நவல்கிஷோர் ராம் என்பவரைச் சந்தித்து வறட்சி பற்றிய தகவல்களை திரட்ட உதவி கேட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த சச்சின் உதவியாளர், இந்த விஷயத்தில் சச்சின் தனியாக செயல்பட விரும்புவதாகவும் எந்த ஒரு அரசியல் தலையீட்டையும் விரும்பவில்லை என்பதையும் தெரிவித்தார்.
சச்சின் டெண்டுல்கரின் இந்த உதவித்திட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் உறுதி செய்துள்ளது. அதாவது நீர்பாசன வசதிகள், மின்சார விநியோகம், சாலைக் கட்டுமானம், குடிநீர் விநியோகம் மற்றும் சில உதவிகளை சச்சின் செய்யவிருப்பதாக கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே பாலிவுட் நட்சத்திரம் நானா படேகர், மராத்தி நடிகர் மகரந்த் அனாஸ்புரே ஆகியோர் ‘நாம்’ அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT