Published : 07 Sep 2021 03:13 AM
Last Updated : 07 Sep 2021 03:13 AM

நெடுஞ்சாலையில் ராஜ்நாத், கட்கரியுடன் விமானத்தை தரையிறக்க ஒத்திகை

ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் 3.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிதாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் உள்ளிட்ட இதர விமானங்களை அவசர காலத்தில் தரை இறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் இந்த நெடுஞ்சாலையை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் திறந்து வைக்கவுள்ளனர். அப்போது இரு அமைச்சர்களையும் விமானத்தில் அமர வைத்து சாலையில் விமானத்தை தரையிறக்கி ஒத்திகை பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, “நாட்டிலேயே அவசர காலத்தில் இந்திய விமானப் படை விமானங்களை தரையிறக்கும் வசதி படைத்த முதல் தேசிய நெடுஞ்சாலையாக இது இருக்கும். கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபரில் லக்னோ-ஆக்ரா எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் போர் விமானங்கள், பயணிகள் விமானங்களை தரையிறக்கிப் பார்த்தோம்.விமானங்களை நெடுஞ்சாலையில் தரையிறக்கி ஒத்திகை பார்க்க இந்திய விமானப் படை அதிகாரிகளுடன், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் (என்எச்ஏஐ) பேசி வருகின்றனர்” என்று தெரிவித்தன. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x