Published : 05 Sep 2021 03:14 AM
Last Updated : 05 Sep 2021 03:14 AM
நீதிமன்றங்களைத் திறக்கக் கோரி சிறுமி ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லியில் உள்ள இந்திய பார் கவுன்சிலில் நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதி வினீத் சரண் கலந்துகொண்டு பேசியதாவது:
நேற்று எனக்கு ஒரு தகவல் வந்தது. அதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சிறுமி ஒருவர் கடிதம் எழுதியுள்ளதாகவும், அதில், கரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன என்றும் தற்போது தொற்று குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது போல நீதிமன்றங்களையும் ஏன் திறக்க கூடாது என்றும் சிறுமி கேட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றங் களைத் திறந்து குற்றம் சாட்டப் பட்டவர்களை நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த சிறுமி கூறியுள்ளார்.
இந்த கடிதத்தையே பொது நலன் மனுவாக (பிஐஎல்) எடுத்துக் கொண்டு நாம் விசாரிக்கலாம் என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா என்னிடம் தெரிவித்தார். விரைவில் இது விசாரணைக்கு வரும். இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு முன்பு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு, கேரளாவைச் சேர்ந்த 5-ம் வகுப்பு பயிலும் லிட்வினா ஜோசப் என்ற மாணவி கடிதம் எழுதி நீதிபதியின் பாராட்டையும் பரிசையும் பெற்றிருக்கிறார். கரோனா காலத்தில் அனைத்து பகுதிகளிலும் நோயாளிகளுக்கு சீரான ஆக்ஸிஜன் விநியோகம் செய்ய நீதிமன்றம் உத்தர விட்டதற்கு பாராட்டு தெரிவித்து அந்தச் சிறுமி தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT