Published : 04 Sep 2021 03:14 AM
Last Updated : 04 Sep 2021 03:14 AM
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான வழக்கில் விசாரணை ஆவணங்கள் கசிந்தது தொடர்பாக, தேஷ்முக் கின் வழக்கறிஞர், சிபிஐ சப்-இன்ஸ்பெக்டர் ஆகிய இருவரிடமும் 2 நாள் விசாரிக்க சிபிஐ.க்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
மகாராஷ்டிர உள்துறை அமைச்சராக இருந்தவர் அனில் தேஷ்முக். மும்பையில் பார் உரிமையாளர்களை அச்சுறுத்தி பணம் பறித்ததாக எழுந்த புகாரில் பதவி விலகினார். இப்புகார் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் சிபிஐ-யின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் ஒரு பகுதி கடந்த 29-ம் தேதி கசிந்தது.
இது தொடர்பாக சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டது. இதில் முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கின் வழக்கறிஞர் ஆனந்த் டாகாவிடம் சிபிஐ சப்-இன்ஸ்பெக்டர் அபிஷேக் திவாரி லஞ்சம் பெற்றுக் கொண்டு, ஆவணங்களை கசியவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து ஆனந்த் டாகா, அபிஷேக் திவாரி ஆகிய இருவரும் கடந்த புதன்கிழமை மும்பையில் விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் இருவரையும் ஒரு வாரத்துக்கு தங்கள் காவலில் விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியது. ஆனால் இருதரப்பு வாதங்களை தொடர்ந்து, 2 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க சிறப்பு நீதிபதி அனுமதி வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT