Last Updated : 01 Sep, 2021 03:15 AM

 

Published : 01 Sep 2021 03:15 AM
Last Updated : 01 Sep 2021 03:15 AM

வெளியுறவுக் கொள்கை பற்றிய சிந்தனையை தூண்டும் நூல்: மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் ‘இந்திய வழி’ நூல் குறித்து பிரபலங்கள் கருத்து

புதுடெல்லி

வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் ‘இந்திய வழி’ என்ற நூல் நமது வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்ற சிந்தனையை தூண்டுவதாக உள்ளது எனபிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

வெளியுறவு அமைச்சரான எஸ்.ஜெய்சங்கர், முன்னாள் வெளியுறவு செயலாளர் ஆவார்.1977-ல் ஐஎப்எஸ் அதிகாரியான இவர் ஒரு தமிழர். பல்வேறு நாடுகளில் இந்திய தூதரகங்களில் பணியாற்றியவர். இவர்தனது பணியின்போது, இந்தியாவுக்கு இருந்த சவால்களை உற்றுநோக்கி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசியுள்ளார். அவரது முக்கிய கருத்துகள் தொகுக்கப்பட்டு, ‘India Way –Strategies for an Uncertain world’ என்ற ஆங்கில நூலாக வெளியாகியுள்ளது.

இந்த நூலை தமிழில் ‘இந்தியவழி – நிச்சயமற்ற உலகுக்கான வியூகங்கள்’ என்ற பெயரில் ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம்கடந்த ஜூன் 28-ல் வெளியிட்டது. இந்த நூல் தொடர்பான பிரபலங்களின் கருத்துகள், ஒலிக்காட்சிபதிவாக தொகுக்கப்பட்டு யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் வரலாற்றுப் பேராசிரியர் டி.கே.வெங்கடசுப்பர மணியன் பேசும்போது, “இந்த நூல் - வெளியுறவுத் துறையில் இந்தியாவுக்குள்ள சவால்களை சுட்டிக்காட்டி, நமது வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்ற சிந்தனையை தூண்டுவதாக உள்ளது” எனப் பாராட்டியுள்ளார்.

நம் நாடு ஒரு வல்லரசாக வேண்டும் என ஆர்வம் நம் அனைவரின் மனதில் இருப்பதால், இந்தப் படைப்பு ஒரு நூலாகியிருப்பதாக சென்னை அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் மருத்துவர் ஏ.பன்னீர் கூறியுள்ளார். நம் நாடு வல்லரசாக நாம் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் எனவும் நூலாசிரியர் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளதாக அவர் தனது விமர்சனத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்பதிவில் தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணன் கூறும்போது, “இதுநாள் வரை நம் நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்ன? நாம் வெளிநாடுகளை எப்படி அணுகி வந்தோம்? அது எப்படி இருக்க வேண்டும்? என்பது போன்ற பல்வேறு முக்கிய கருத்துக்களை இந்த நூலில் அமைச்சர் ஜெய்சங்கர் வழங்கியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை பற்றிய பல சிக்கல்களை பாமர மக்களுக்கும் புரியும் வகையில் எளிதாக தனது நூலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உணர்த்தியிருப்பதாக ஒரு கருத்து இக்காணொலியில் பதிவாகி உள்ளது.

இதை பாஜகவின் வெளியுறவுப் பிரிவு தலைவரும், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கின் அதிகாரப்பூர்வ ஆங்கில இதழான ‘ஆர்கனைஸர்’ முன்னாள் ஆசிரியருமான சேஷாத்ரி சாரி தெரிவித்துள்ளார்.

இலங்கை செய்தியாளராக ‘டெக்கான் ஹெரால்டு’ நாளிதழில் பணியாற்றிய முன்னாள் பத்திரிகையாளர் எஸ்.முராரி கூறும்போது, “வெளியுறவுத் துறையில் ஆர்வமாக உள்ள வாசகர்களுக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் இந்நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான வீ.ரெங்கநாதன், “வெளிநாடுகள் இடையே இந்தியா மதிப்பிற்குரியதாக மட்டுமன்றி, விரும்பத்தகுந்த வகையிலும் மாறும் என்ற நம்பிக்கையை நூலாசிரியர் அளித்துள்ளார்” எனப் பாராட்டியுள்ளார்.

இந்த நூல் தொடர்பான பிரபலங்களின் கருத்துகளை யூடியூபில் https://www.youtube.com/watch?v=kPeHicnxRLw என்ற முகவரியில் வாசகர்கள் காணலாம்.

இந்த நூலின் விலை ரூ.350. நூலைப் பெற என்ற 74012 96562 / 74013 29402 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். https://store.hindutamil.in/publications என்ற இணைய முகவரியிலும் நூலை வாங்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x