Published : 22 Aug 2021 12:18 PM
Last Updated : 22 Aug 2021 12:18 PM

‘‘20 ஆண்டுகால வாழ்க்கை முடிந்தது; இனி பூஜ்யம்’’- விமான நிலையத்தில் கதறி அழுத ஆப்கன் சீக்கிய எம்.பி.

புதுடெல்லி

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் நரேந்தர் சிங் கல்சா காபூலில் இருந்து இந்தியா திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் கதறி அழுதார்.

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் நரேந்தர் சிங் கல்சா காபூலில் இருந்து இந்தியா திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் கதறி அழுதார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைபற்றியுள்ளனர். ஆப்கனில் பல்வேறு நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். குறிப்பாக காபூலில் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அங்குள்ள இந்தியா அழைத்து வர தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படையின் சி17 விமானம் நேற்று முன்தினம் இரவு கொண்டு செல்லப்பட்டது. இந்தியா விமானத்தில் ஏறுவதற்காக வெளியே வந்து சேர்ந்த 150 இந்தியர்களையும் தலிபான்கள் சுற்றி வளைத்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்தியா திரும்பிவர்கள்

இதனைத் தொடர்ந்து இந்தியர்களை மீட்க தலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த நிலையில் இன்று காலை 107 இந்தியர்கள் உள்பட 168 பேரை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சி-17 விமானம் காபூலில் இருந்து இந்தியா வந்தது. இந்த விமானத்தில் இந்தியர்கள் அல்லாமல் ஆப்கனைச் சேர்ந்த இந்துக்களும், சீக்கியர்களும் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர்.

காபூலில் இருந்து இந்தியா திரும்பிய குழுவினரில் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் நரேந்தர் சிங் கல்சாவும் ஒருவர். விமான நிலையத்தில் அவர் கதறி அழுதார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எனக்கு அழுகை வருகிறது . கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கனை மறுகட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டோம். ஆப்கன் ஜனநாயக பாதைகக்கு திரும்பி வந்தநிலையில் தலிபான்களிடம் சிக்கிக் கொண்டது. இப்போது அனைத்தும் முடிந்து விட்டன. எங்கள் நிலை இப்போது பூஜ்யம் தான். காபூலில் இருந்து எங்களை மீ்ட்டு வர நடவடிக்கை எடுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆப்கனி்ல் ஒரு காலத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சீக்கியர்களும் இந்துக்களும் இருந்தனர்.1992 இல் ஆப்கன் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிய பிறகு அவர்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினர். 2020- ல் காபூல் குருத்வாரா தாக்குதலின் போது, ஆப்கானிஸ்தானில் 700 க்கும் குறைவான சீக்கியர்களும் இந்துக்களும் இருந்தனர். அப்போதிருந்து, அவர்களில் குறைந்தது 400 பேர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x