Published : 22 Aug 2021 03:12 AM
Last Updated : 22 Aug 2021 03:12 AM

வாகன ஓட்டியுடன் ‘பைக்’கை தூக்கிச் சென்ற போலீஸார்: சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ

வாகன ஓட்டியுடன் மோட்டார் சைக்கிளை போக்குவரத்து போலீஸார் பறிமுதல் செய்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் சமர்த் போக்குவரத்து போலீஸ் எல்லைக்குட்பட்டபகுதி யாக இருப்பது நானாபத். இப்பகுதியில் கடந்த வியாழக் கிழமை போக்குவரத்து போலீஸார் விதிகளை மீறி சாலையோரம் நிறுத்தியிருந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

அப்போது அப்பகுதியில் வாகன நிறுத்தம் இல்லாத பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வாகனத்தை, கொக்கி மூலம் தூக்கி வேனில் நிறுத்தும் பணியில் போலீஸாரும், ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களும் ஈடுபட்டனர். அப்போது வாகனத்துக்கு சொந்தக் காரரான இளைஞர் ஓடிவந்து மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டார். விதிமீறி வாகனத்தை நிறுத்தி இருந்ததால் அதை போலீஸ் நிலையத்துக்கு எடுத்து செல்வதாகவும், வாகனத்தை விட்டு கீழே இறங்கும்படியும் அந்த இளைஞரிடம் போக்குவரத்து போலீஸார் எடுத்து கூறினர்.

இதற்கிடையில் அந்த காட்சிகளை வீடியோவாகப் படம் பிடித்த சிலர் அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அது தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் (போக்குவரத்து) ராகுல் ராமே கூறியதாவது:

போக்குவரத்துக்கு இடைஞ் சலாக உள்ள வாகனங்களை அதுவும் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து அவற்றை பறிமுதல் செய்து வருகிறோம். அபராதம் செலுத்திய பிறகு உரிமையாளர்களிடம் வாகனங்களை ஒப்படைக்கிறோம்.

ஒப்பந்த ஊழியர்கள் மூலம்தான் வாகனங்களை வேனில் தூக்கி நிறுத்துவது, இறக்குவது போன்ற பணிகளைச் செய்து வருகிறோம். அப்படி வாகனத்தை தூக்கும் போதுதான் அதற்குரிய இளைஞர் ஓடிவந்து ஏறிவிட்டார். எனினும், அவருடன் சேர்த்து வாகனத்தை வேனில் இறக்கினோம். பின்னர் அந்த வாகன ஓட்டி மன்னிப்பு கேட்டு, விதியை மீறி வாகனத்தை நிறுத்தியதற்காக அபராதம் செலுத்தினார். மேலும் சம்பந்தப் பட்ட போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிள் கட்டுப்பாட்டு அறைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x