Published : 18 Aug 2021 12:37 PM
Last Updated : 18 Aug 2021 12:37 PM

‘‘மலையாளி தலிபான்’’-  நெட்டிசன்கள் கண்டனம்; சரியே என சசி தரூர் மீண்டும் ட்வீட்

தலிபான்களில் மலையாளிகளும் இடம் பெற்றுள்ளதாக கேரள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தான் கூறியது சரியே என்று தெரிவித்து அவர் மீண்டும் ட்வீட் செய்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

தலிபான்கள் வெற்றிக் கொண்டாட்டம் தொடர்பான வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதற்கு முன்னாள் மத்திய அமைச்சரும், கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர் பதில் அளித்த இருந்தார்.

அதில் ‘‘வீடியோவை பார்த்தபோது தலிபான்களில் இரண்டு பேர் மலையாளிகள் போல் தெரிகிறது. அவர்கள் இருவரும் மலையாளத்தில் பேசிக் கொள்கின்றனர்’’ எனக் கூறியிருந்தார்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். ‘‘தலிபான்களில் கேரளாவை சேர்ந்த யாரும் இல்லை. அவர்கள் ஆப்கனின் ஜாபுல் மாகாணத்தின் பலோக் பகுதியை சேர்ந்தவர்கள். பலோக் பகுதியினர் பேசும் மொழி, கேட்பதற்கு மலையாளம் போல் இருக்கும்’’ என ஒருவர் பதில் தெரிவித்த இருந்தார்.

இதுமட்டுமின்றி கேரளாவை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் சசி தரூருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

‘‘கேரள மக்களை தீவிரவாதிகளுடன் இணைத்து சசி தரூர் கூறிய கருத்துக்கள் கண்டத்துக்குரியது’’ என நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் சசிதரூர் தான் கூறியது சரியே எனக் கூறி மீண்டும் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் ‘‘தாலிபானில் மலையாளிகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த எனது ட்வீட்டை கண்டனம் செய்த அனைவரும் இதனை கவனியுங்கள். இன்று ஆப்கன் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களை இப்போது கவனிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x