Last Updated : 18 Aug, 2021 09:18 AM

 

Published : 18 Aug 2021 09:18 AM
Last Updated : 18 Aug 2021 09:18 AM

இன்ஸ்டாகிராம் பதிவு: ராகுல் காந்திக்கு ஃபேஸ்புக் நோட்டீஸ் 


டெல்லி சிறுமி பலாத்காரக் கொலை தொடர்பாக பெற்றோருடன் பேசியது தொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராமில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிவிட்டிருந்தது தொடர்பாக அதை நீக்கக் கோரி அவருக்கு ஃபேஸ்புக் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

டெல்லியில் சிறுமி பலாத்காரக் கொலையில், அந்தக் குழந்தையின் பெற்றோரைச் சந்தித்துப் பேசிய புகைப்படத்தை ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.

ட்விட்டரின் விதிகளுக்கு முரணாகவும், குழந்தைகள் உரிமைகளுக்கு எதிராகவும், போக்ஸோ சட்டத்துக்கு எதிராகவும் புகைப்படம் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ராகுல் காந்தி தனது ட்விட்டர் தளத்திலிருந்து அந்தப் புகைப்படத்தை நீக்கினார். அதைத் தொடர்ந்து அவரின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது.

மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அஜய் மக்கான், ஜிதேந்திர சிங், மாணிக்கம் தாகூர், சுஷ்மதா தேவ் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டன. விதிகளை மீறியதாகக் கூறி காங்கிஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் அனைத்தும் நேற்றுமுன்தினம் அன்-லாக் செய்யப்பட்டன.

இந்தச் சூழலில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தடை செய்ய , தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பில் வலியுறுத்தி இருந்தது.

அதற்கு ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து எந்தவிதமான பதிலும் இல்லை. இதையடுத்து, ஃபேஸ்புக் நிறுவன இ்ந்திய அதிகாரிகளுக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. அந்த சம்மனுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “ ராகுல் காந்தி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிறுமியின் பெற்றோர் அடையாளத்தை வெளியிடும் வீடியோவை உடனடியாக நீக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்” எனத் தெரிவித்தது.

இதையடுத்து, ஃபேஸ்புக் நிறுவனம் நேரில் ஆஜராவதிலிருந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விலக்கு அளித்தது

இந்த சூழலில் ராகுல்காந்திக்கு ஃபேஸ்புக் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதில் “ தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கூற்றின்படி, கடந்த 10-ம் தேதி தங்களின் இன்ஸ்டாகிராம் கணக்கில் சிறார் பாதுகாப்புச்சட்டம் பிரிவு 74 மற்றும் போக்ஸோ சட்டம் 23ன்பிரிவு, ஐபிசி 288ஏ ஆகியவற்றை மீறி டெல்லி சிறுமியின் பெற்றோர் அடையாளத்தை வெளியிடும் வீடியோவை பதிவிட்டுள்ளீர்கள். அந்த பதிவை நீக்குமாறு என்சிபிசிஆர் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, அதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனத்தெரிவித்துள்ளது.

என்சிபிசிஆர் தலைவர் பிரியங்கா கணூங்கா கூறுகையில் “ ஃபேஸ்புக் நிறுவனம் நாங்கள் அளித்த நோட்டீஸுக்கு பதில் அளி்த்துவிட்டது. ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி, இன்ஸ்டாகிராம் பதிவை உடனடியாக நீக்கவும் உத்தரவிட்டுள்ளது”எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x