Last Updated : 16 Aug, 2021 11:51 AM

 

Published : 16 Aug 2021 11:51 AM
Last Updated : 16 Aug 2021 11:51 AM

இந்தியாவில் 145 நாட்களில் இல்லாத அளவாக கரோனா தினசரி தொற்று குறைந்தது

படம்: ஏஎன்ஐ.

புதுடெல்லி

இந்தியாவில் 145 நாட்களில் இல்லாத அளவாக தினசரி கரோனா தொற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 32,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

''கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 32 ஆயிரத்து 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 22 லட்சத்து 25 ஆயிரத்து 513 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 81 ஆயிரத்து 947 ஆகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின் கரோனா தொற்று இந்த அளவுக்கு முதல் முறையாகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் 1.18 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

கரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 14 லட்சத்து 11 ஆயிரத்து 924 பேர் குணமடைந்தனர், குணமடைந்தோர் சதவீதம் 97.48 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின் அதிகபட்சமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 417 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 31 ஆயிரத்து 642 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் 179 பேரும், கேரளாவில் 109 பேரும் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை 49 கோடியே 48 லட்சத்து 5 ஆயிரத்து 652 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. ஞாயிறு மட்டும் 11 லட்சத்து 81 ஆயிரத்து 212 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை நாட்டில் ஏறக்குறைய 54.58 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x