Last Updated : 14 Aug, 2021 12:52 PM

 

Published : 14 Aug 2021 12:52 PM
Last Updated : 14 Aug 2021 12:52 PM

ராகுல் காந்தி இன்ஸ்டாகிராம் பதிவு: ஃபேஸ்புக் அதிகாரிகள் நேரில் ஆஜராக என்சிபிசிஆர் சம்மன்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, டெல்லி சிறுமி பலாத்காரக் கொலை தொடர்பாக பெற்றோரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது தொடர்பாக நடவடிக்கை ஏதும் எடுக்காதது குறித்து ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

டெல்லியில் சிறுமி பலாத்காரக் கொலையில், அந்தக் குழந்தையின் பெற்றோரைச் சந்தித்துப் பேசிய புகைப்படத்தை ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். ட்விட்டரின் விதிகளுக்கு முரணாகவும், குழந்தைகள் உரிமைகளுக்கு எதிராகவும், போக்ஸோ சட்டத்துக்கு எதிராகவும் புகைப்படம் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, ராகுல் காந்தி தனது ட்விட்டர் தளத்திலிருந்து அந்தப் புகைப்படத்தை நீக்கினார். அதைத் தொடர்ந்து அவரின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது.

மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அஜய் மக்கான், ஜிதேந்திர சிங், மாணிக்கம் தாகூர், சுஷ்மதா தேவ் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டன. விதிகளை மீறியதாகக் கூறி காங்கிஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் அனைத்தும் இன்று அன்-லாக் செய்யப்பட்டன.

இந்தச் சூழலில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தடை செய்ய , தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பில் வலியுறுத்தி இருந்தது.

அதற்கு ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து எந்தவிதமான பதிலும் இல்லை. இதையடுத்து, ஃபேஸ்புக் நிறுவன இ்ந்திய அதிகாரிகளுக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

அதில் “ டெல்லி சிறுமி பலாத்தாரக் கொலை தொடர்பாக பெற்றோரின் புகைப்படம், வீடியோவை இன்ஸ்டாகிராமில் ராகுல் காந்தி பதிவிட்டது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் கேட்டிருந்தோம் அதை நீக்குவது தொடர்பாகவோ, அதற்கு பதிலோ இதுவரை இல்லை.

ஆதலால், வரும் செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள என்சிபிசிஆர் அலுவலகத்துக்கு ஃபேஸ்புக் இந்தியா சார்பில் பிரதிநிதிகள் நேரிலோ அல்லது காணொலி மூலமோ ஆஜராகி ராகுல் காந்தி இன்ஸ்டாகிாரம் கணக்கு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்க வேண்டும்” எனத் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x