Published : 06 Aug 2021 10:12 PM
Last Updated : 06 Aug 2021 10:12 PM

கோவோவாக்ஸ் தடுப்பூசி அக்டோபரில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு: அமித்ஷாவுடனான சந்திப்புக்குப் பின் அடார் பூனாவாலா தகவல்

சீரம் மருந்து நிறுவனத்தின் 2-வதாக தடுப்பு மருந்து ‘‘கோவோவாக்ஸ்" அக்டோபரில் பயன்பாட்டுக்கு வருமென சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் அடார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தைகளுக்கான தடுப்பூசி 2022 முதல் காலாண்டு பருவத்திற்குள்ளதாகவே பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சீரம் நிறுவன சிஇஓ அடார் பூனாவால சந்தித்தார்.

இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது. சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அடார் பூனாவாலா, "அரசாங்கம் எங்களுக்கு உதவி வருவதால் நிதி நெருக்கடி ஏதுமில்லை. நாங்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

கோவோவாக்ஸ் தடுப்பூசி வரும் அக்டோபரில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். இதற்கு மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளிக்கும் என நம்புகிறோம்.

குழந்தைகளுக்கான கோவோவாக்ஸ் தடுப்பூசி 2022 ஜனவரி அல்லது பிப்ரவரிக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

குழந்தைகளுக்கான தடுப்பூசியும் இரண்டு டோஸ் வழங்கப்படும். இதன் விலையானது அறிமுகத்தின் போது தெரிவிக்கப்படும்.

கோவாக்சின் தடுப்பூசியைப் பொறுத்தவரை மாதத்துக்கு 130 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. இது விரைவில் அதிகரிக்கப்படும்" என்று கூறினார்.

முன்னதாக இன்று காலை அடார் பூனாவாலா மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x