Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM

திருப்பதியில் ட்ரோன்களை எதிர்கொள்ள ரூ.2,500 கோடி செலவில் பாதுகாப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஏற்கனவே தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளது. இதன் காரணமாக இக்கோயிலுக்கு 24 மணி நேரமும் ஆக்டோபஸ் பாதுகாப்பு உட்பட, ஆயுதப்படை, அதிரடிப்படை, போலீஸ் படை, தேவஸ்தான கண்காணிப்பு படை என 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீப காலமாக ட்ரோன் மூலம் தீவிரவாதிகள் நாட்டின் எல்லைகளை மீறி நம் நாட்டுக்குள் நுழைந்து நாச வேலையில் ஈடுபட முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி கர்நாடக மாநிலம், கோலாரில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சார்பில் நடைபெற்ற கருந்தரங்கில் திருமலை திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு தலைமை அதிகாரி கோபிநாத் ஜெட்டி மற்றும் சில உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அங்கு ட்ரோன் தாக்குதலை எதிர்கொள்ளும் சில கருவிகள் மாதிரிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவை ஒவ்வொன்றும் ரூ.25 கோடி என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டியின் ஆலோசனையின்பேரில், இந்த விலை உயர்ந்த கருவியை ஒன்று தலா ரூ.22 கோடிக்கு விலை பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி 100 கருவிகள் வாங்கி, சுமார் 2,500 கோடி செலவு செய்து திருமலை மற்றும் திருப்பதியில் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x