Published : 22 Jul 2021 07:04 PM
Last Updated : 22 Jul 2021 07:04 PM

சில்லரை - மொத்த வியாபாரம் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவில் சேர்ப்பு

புதுடெல்லி

சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவாக சேர்க்கப்பட்டுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் நாராயண் ரானே மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியுள்ளதாவது:

2021 ஜூலை 2ம் தேதி முதல் சில்லரை மற்றும் மொத்த விற்பனை வர்த்தகத்தை குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவாக மத்திய அரசு சேர்த்துள்ளது. கடந்த ஜூன் 26ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின் மூலம், தொழில் துறையில் செய்யும் முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் வகைப்பாட்டின் கூட்டு அளவுகோல் இருக்கும் என அரசு தெரிவித்திருந்தது. குறு,சிறு மற்றும் நடுத்தர தொழிலின் புதிய வகைப்பாடு அறிமுகம் மூலம், கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல், புதிய இலவச ஆன்லைன் உதயம் பதிவு முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இது முந்தைய உத்யோக் ஆதார ஒப்பந்த தாக்கல் முறையை மாற்றியுள்ளது. குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் திட்டங்கள் மற்றும் பயன்களை பெற உதயம் பதிவு அவசியம்.

குறு, சிறு நிறுவனங்களுக்கு 3-ம் நபர் உத்தரவாதமின்றி, எளிதாக கடன் வழங்கும் முறையை வலுப்படுத்த கடன் உத்திரவாத திட்டத்தை அரசு தொடங்கியது. இதன் மூலம் கடன் பெறும் உறுப்பு நிறுவனங்களுக்கு ரூ.200 லட்சம் வரை கடன் உத்திரவாதம் அளிக்கப்படுகிறது. இத்திட்டம் தொடங்கியதில் இருந்து 53,86,739 உத்திரவாதம் மூலம், ரூ. 2,72,007.42 கோடி அளவுக்கு கடன் உத்திரவாத திட்டத்தின் கீழ் கடன் அளிக்கப்பட்டுள்ளது.

சிறு விவசாயிகள், தங்கள் வருவாயை பெருக்குவதற்கு, குடிசைத் தொழில் தொடங்க ஊக்குவிக்கப்படுகின்றனர். இத்திட்டத்தின் கீழ், வேளாண் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில், பருப்புகள் மற்றும் உணவு தானியங்கள் பதப்படுத்துதல் தொழில்கள், காய் கறி மற்றும் பழங்கள் பதப்படுத்தும் தொழில், கிராம எண்ணெய் தொழில், வனப் பொருட்கள் தொழில், மூலிகை தொழில், தேனி வளர்ப்பு உட்பட பல தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் தொடங்கியதில் இருந்து கடந்த 9ம் தேதி வரை 6,97,612 சிறு தொழில்கள், விவசாயிகளால், ரூ.16688.17 கோடி மானியத்துடன் தொடங்கப்பட்டுள்ளன.

பிரதமரின் வேலைவாய்ப்பு உற்பத்தி/ கிராம வேலை வாய்ப்பு உற்பத்தி திட்டம்/ முத்ரா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட பலன்களை குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற முடியும் மற்றும் கோவிட் தொற்று காரணமாக பிரச்சினைகளை சந்தித்த குறு,சிறு நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

பிரதமரின் வேலைவாய்ப்பு உற்பத்தி திட்டத்தின் கீழ், 2020-21ம் ஆண்டில் ஜூலை வரை 91,054 திட்டங்களும், 7,28,432 வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய சிறு தொழில்கள் கார்ப்பரேஷன், எம்எஸ்எம்இ உலகளாவிய சந்தை இணையதளத்தை வைத்துள்ளது.

இதன் கீழ் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆன்லைன் பதிவு, இணைய கடை மேலாண்மை, பணம் செலுத்தும் முறைகள், வாடிக்கையாளர் உதவி போன்றவை கால் சென்டர்கள் மூலம் மேற்கொள்ளப்படுவது இந்த இணையதளத்தில் சிறப்பு அம்சங்கள். காதி அமைப்பு இ-வர்த்தகத்துக்கு ekhadiindia.com என்ற இணையளத்தை வைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x