Published : 22 Jul 2021 03:12 AM
Last Updated : 22 Jul 2021 03:12 AM

கேரளாவில் ரூ.9 லட்சம் வாடகை பாக்கிக்காக கடையை பூட்டிய மாநகராட்சி அதிகாரிகள்: வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு நேசக்கரம் நீட்டிய தொழிலதிபர்

பிரசன்னாவுக்கு நிதியுதவி வழங்கும் லூலூ மார்ட் ஊழியர்கள்.

திருவனந்தபுரம்

கேரளாவின் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா (54). இவர் கொச்சி மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பழரசக் கடை நடத்தி வந்தார். கரோனா பொதுமுடக்கத்தால் வருமானம் இன்றி தவித்தார்.

இந்நிலையில், அவருக்கு ரூ.9லட்சம் வாடகை பாக்கி இருப்பதாகக் கூறி, கொச்சி மாநகர வளர்ச்சிக் கழக அதிகாரிகள் அவரது கடைக்கு சீல் வைத்தனர். இதனால் வாழ்வாதாரம் இழந்த பிரசன்னா, தனது கடை முன்பு போராட்டம் நடத்தினார். கணவர் இல்லாமல் தனித்துவாழும் பிரசன்னா மாற்றுத்திறனாளி மகளையும் கவனித்து வருகிறார்.

கரோனா சூழலால் தன்னால் மாதம் ரூ.13,800 வாடகை செலுத்த முடியவில்லை எனவும், தனது கடையைத் திறந்து தொழில் நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கேரளாவின் புகழ்பெற்ற லூலூ குழும தலைவர் யூசுப் அலி, தனது கொச்சி அலுவலக ஊழியர்களைத் தொடர்புகொண்டு, மாநகராட்சிக்கு பாக்கியை செலுத்த ஏதுவாக பிரசன்னாவிடம் ரூ.9 லட்சம் வழங்குமாறு அறிவுறுத்தினார். அதன்படி, அவரது நிறுவன ஊழியர்கள், பிரசன்னாவை நேரில் சந்தித்து அந்தத் தொகையை வழங்கினார்கள். மேலும் கடைக்கு தேவையான மூலப் பொருட்களை வாங்குவதற்காக கூடுதலாக ரூ.2லட்சமும் வழங்க, அவர் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார்.

இதுகுறித்து பிரசன்னா இந்துதமிழிடம் கூறும்போது, “ரூ.9 ஆயிரத்துக்கே வழியில்லாமல் தவிக்கும் என்னிடம் ரூ.9 லட்சம் வாடகை பாக்கி இருப்பதாக கடிதம் கொடுத்தபோது தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை எனத் தோன்றியது. யூசுப் அலியை கடவுளே எனக்காக அனுப்பியது போல் உள்ளது. காலம் முழுவதும் அவருக்காக இறைவனிடம் பிரார்த் திப்பேன்’’ என உருக்கமாக தெரிவித்தார்.

முதல்முறை அல்ல...

லூலூ மார்ட் எளிய மக்களுக்கு உதவி செய்வது இது முதல்முறை அல்ல. திருச்சூரைச் சேர்ந்த கிருஷ்ணன் துபாயில் வசித்து வந்தார். அவரது கார் மோதியதில் ஒரு சிறுவன் உயிரிழந்தார். இதனால் கைது செய்யப்பட்ட கிருஷ்ணனுக்கு 2012-ல் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை அறிந்த யூசுப் அலி, சிறுவனின் மரணத்திற்கு இழப்பீடாக ரூ.1 கோடியை தனது சொந்தப் பணத்தில் இருந்து கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, அந்நாட்டுசட்டப்படி அவர் அண்மையில் விடுதலையாகி கேரளா திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x