Last Updated : 19 Jul, 2021 06:50 PM

 

Published : 19 Jul 2021 06:50 PM
Last Updated : 19 Jul 2021 06:50 PM

குடியரசுத் தலைவரின் அடுத்த ரயில் பயணம்: ராமர் கோயிலுக்குச் செல்லத் திட்டம்

உத்தரப்பிரதேசத்தின் கான்பூரிலுள்ள தனது கிராமத்திற்கு சமீபத்தில் ரயிலில் சென்று வந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். இதன் அடுத்த பயணமாக அவர் அயோத்திக்கு சென்று ராமரை தரிசனம் செய்யத் திட்டமிடுவதாகத் தெரிகிறது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் டெல்லியிலிருந்து கான்பூர் வரை ரயிலில் தன் கிராமத்திற்கு சென்று வந்தார். இதற்காக மத்திய ரயில்துறை சார்பில் குடியரசுத் தலைவருக்காக சிறப்பு ரயில் விடப்பட்டது. இந்த சிறப்பு ரயிலில் மீண்டும் அடுத்த மாதம் ஆகஸ்ட் 27 முதல் 29 வரையிலானத் தேதிகளில் பயணிக்கக் குடியரசுத் தலைவர் திட்டமிடுவதாகத் தெரிகிறது. லக்னோவிலிருந்து அயோத்தி வரை ரயிலில் செல்லத் தயாராவதாகக் கூறப்படுகிறது.

இப்பயணம் குறித்து அதிகாரபூர்வத் தகவல் இன்னும் வெளியாகவில்லை. எனினும், குடியரசுத் தலைவர் பயணத்திற்காக ரயில் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் மேலும் பல துறைகள் அவருக்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளன. இதன்படி, ஆகஸ்ட் 27 இல் சிறப்பு விமானம் மூலம் லக்னோ வருகிறார் குடியரசு தலைவர் ராம்நாத். அங்கிருந்து உபியின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த மாவட்டமான கோரக்பூருக்கு மறுநாள் செல்கிறார். இங்கு ஆயுஷ் பல்கலைகழகத்திற்கான அடிக்கல் நாட்டுகிறார்.

இரவு மீண்டும் லக்னோவிற்கு திரும்பி மறுநாள், ஆகஸ்ட் 28 இல் அயோத்திக்கு தனக்கான சிறப்பு ரயிலில் பயணம் செய்கிறார். அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வரும் கோயிலில் ராமரை குடியரசு தலைவர் தரிசிக்கிறார். இவரது பயணத்தால் அயோத்தி ராமரை தரிசித்த முதல் குடியரசுத் தலைவராகிறார் ராம்நாத் கோவிந்த். சுதந்திரத்திற்கு பின் இதுவரை எந்த குடியரசுத் தலைவரும் அயோத்தி ராமரை தரிசித்திதாகத் தெரியவில்லை.

அதேபோல், பிரதமர்களில் ராஜீவ் காந்தி மட்டுமே அயோத்தியில் ராமரை தரிசித்துள்ளதாகக் கருதப்படுகிறது. இவருக்கு பின் அயோத்தியில் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் 2004 மக்களவை தேர்தலுக்கானப் பிரச்சாரத்தை மட்டும் துவக்கி வைத்தார்.

அப்போது, அயோத்தி நிலத்தின் மீதான வழக்கு அலகாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததால் வாஜ்பாய் அங்கு செல்லவில்லை. இதன் பின் வழக்கு முடிவிற்கு வந்த பின் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் நரேந்தர மோடி வந்திருந்தார். அயோத்தி வரும் குடியரசுத் தலைவர் அங்கு மேலும் பல திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x