Last Updated : 04 Jul, 2021 09:05 AM

 

Published : 04 Jul 2021 09:05 AM
Last Updated : 04 Jul 2021 09:05 AM

கரோனா 3-வது அலை எப்படி இருக்கும்? மத்திய அரசின் அறிவியல் வல்லுநர் விரிவான விளக்கம்


கரோனா தடுப்பு வழிகாட்டல்களை முறையாக மக்கள் பின்பற்றாமல் இருந்தால், பெருந்தொற்றின் 3-வது அலை அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஏற்படலாம் என்றும், 2-வது அலையில் ஏற்பட்ட பாதிப்புகளில் பாதி அளவுவரை இருக்கலாம் என்று மத்திய அரசின் அறிவியல் வல்லுநர்கள் குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

கான்பூர் ஐஐடி அறிவியல் விஞ்ஞானியாயான மணிந்திரா அகர்வால், ஐஐடி ஹைதராபாத்தின் அறிவியல் விஞ்ஞானி வித்யாசாஹர் ஆகியோர் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் சார்பில் உருவாக்கப்பட்ட கரோனா கணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்புகளை கணித ரீதியாகக் கணிக்கும் வகையில் இந்தக் குழுவை மத்திய அரசு அமைத்தது.

கரோனா வைரஸ் 2-வது அலை நாட்டை உலுக்கி எடுத்த நிலையில், தற்போது மெல்ல பாதிப்பு குறைந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு, மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர், பொருளாதாரச் செயல்பாடுகளும் இயல்புக்கு மெல்ல திரும்புகிறது.

இந்நிலையில் மக்கள் முறையாக கரோனா தடுப்பு வழிமுறைகளான முகக்கவசம், சமூக விலகல், கைகளைக் கழுவுதல் போன்றவற்றை செய்யாமல் இருந்தால், 3-வது அலை விரைவில் உருவாகும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு தடுப்பூசி செலுத்துவதை விரைவுப்படுத்தால் 3-வது அலையின் தாக்கத்தை குறைக்கலாம், தடுக்க முடியாது என்று எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் 3-வது அலையின் தாக்கம் குறித்து ஐஐடி அறிவியல் அறிஞர் அகர்வால் அளித்த பேட்டியில் கூறுகையில் “ மக்கள் கரோனா தடுப்புமுறைகளை முறையாகப் பின்பற்றாவிட்டால், அக்டோபர் முதல் நவம்பர் மாதங்களில் 3-வது அலை ஏற்படும். இந்த அலையின் தாக்கம், பாதிப்பு என்பது 2-வது அலையில் ஏற்பட்டதில் பாதி அளவுக்கு இருக்கும்.

அதாவது 2-வது அலையில் அதிகபட்சமாக 4லட்சம் பேர்வரை தினசரி பாதிக்கப்பட்டனர், அப்படியென்றால், 3-வது அலையில் அதிகபட்சமாக 2 லட்சம் பேர்வரை பாதிக்கப்படலாம்.

கரோனா வைரஸில் உருமாற்றம் ஏதும் நடந்தால், 3-வது அலையில் தொற்றுப்பரவல் அதிவேகமாக இருக்கும். மக்கள் நோய்எதிர்ப்புச்சக்தியை இழத்தல், தடுப்பூசிச் செலுத்துதல் போன்றவற்றால், அதிகமான வீரியமிக்க வைரஸ் உருவாகவும் வாய்ப்புள்ளது. இதுதொடர்பான விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.

3-விதமான தோற்றங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். முதலாவது சாதகமான வாய்ப்பு, அதாவது ஆகஸ்ட் மாதத்துக்குள் மக்கள் இயல்புவாழ்க்கை வந்துவிட்டால் புதிதாக வைரஸி்ல் உருமாற்றம் இருக்காது. 2-வதாக, தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், கரோனாவில் பாதிப்பு 20 சதவீதம் குறைவாக இருக்கும் என்பது, 3வதாக, ஆகஸ்ட் மாதத்துக்குள்ளாவே புதிய வீரியம் மிக்க உருமாறிய கரோனா வைரஸ் பரவுவதற்கு 25 சதவீதம் வாய்ப்புள்ளதாகும்.

எங்களின் கணிப்பின்படி 2-வது அலை ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் குறையக்கூடும், அதேநேரத்தில் 3-வது அலை அக்டோபர் முதல் நவம்பர் மாதங்களில் உச்சமடையலாம், அப்போது தினசரி 1.50 லட்சம் முதல் 2 லட்சம்பேர் வரை பாதிக்கப்படலாம்.

2-வது அலையில் ஏற்பட்ட பாதிப்பில் பாதிஅளவு ஏற்படலாம். உருமாற்றம் அடைந்த புதிய வைரஸ் உருவாகினால், பரவல் வேகமும் அதிகமாக இருக்கும், ஆனால், 2-வது அலையில் ஏற்பட்ட பாதிப்பில் பாதியளவுதான் இருக்கும். தடுப்பூசி செலுத்தும் வேகம் அதிகப்படுத்தும் பட்சத்தில் 3-வது மற்றும் 4-வது அலையின் பாதிப்புகளைக் குறைக்க முடியும், குறைவாகவு்ம இருக்கும்” எனத் தெரிவித்தார்.

மற்றொரு அறிவியல் வல்லுநர் வித்யாசாகர் கூறுகையில் “ 3-வது அலையில் மக்கள் பாதிக்கப்பட்டாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவு குறைவாவே இருக்கும். உதாரணமாக இங்கிலாந்தில் 3-வது அலையில் 60 ஆயிரம் பேர் நாள்தோறும் பாதிக்கப்பட்டாலும், 1500 அளவில்தான்உயிரிழப்பு இருக்கிறது.
இது 4-வது அலையில் 21 ஆயிரமாக பாதிப்புக் குறைந்து, 14 பேராக உயிரிழப்பு குறைந்துவிடும். கரோனா தொற்றைக் குறைப்பதில் தடுப்பூசி முக்கியப் பங்கு வகிக்கும், மருத்துவமனையில் சேர்வதையும் தடுக்கும்” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x