Published : 02 Jul 2021 08:55 AM
Last Updated : 02 Jul 2021 08:55 AM

மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்: யார் யாருக்கு வாய்ப்பு?

கோப்புப் படம்

புதுடெல்லி

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தி வரும்நிலையில் விரைவில் பதவியேற்பு நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, மத்திய அமைச்சரவையில் இதுவரை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் தனது அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் விரும்புவதாகவும், இந்த மாற்றம் விரைவில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதேபோல, அடுத்த ஆண்டுசட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள உத்தர பிரதேசத்தில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் சில நடவடிக்கைகளை மத்திய பாஜக தலைமை எடுத்து வருகிறது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இதுதொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. அதற்கு ஏதுவாக மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க பாஜக மேலிடம் விரும்புவதாக தெரிகிறது. இதுதொடர்பாக மாநில பாஜக தலைவர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.

பிரதமர் மோடி தனது இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜகதேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை அண்மையில் சந்தித்துப் பேசினார். இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவகாரம் குறித்து எதுவும் வெளியாகவில்லை.

இதைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்கள், தலைவர்களுடன் அமித் ஷா கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த 12, 13-ம் தேதிகளில் உ.பி.,மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநில எம்.பி.க்களை அமித் ஷா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதேபோல, பிரதமர் மோடியும் கடந்த 5 நாட்களாக பாஜக எம்.பி.க்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார். இதன்மூலம் மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

கரோனா 2-வது அலை காரணமாக பாஜக தலைவர்களின் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. தற்போது 2-வது அலை குறையத்தொடங்கியுள்ளதால் பாஜகஎம்.பி.க்களை கட்சியின் தேசியத் தலைவர் நட்டாவும், அமித் ஷாவும் சந்தித்துப் பேசி வருகின்றனர்.

மத்திய அமைச்சரவையில் 28காலி இடங்கள் இருப்பதாகத் தெரிகிறது. தற்போது அமைச்சரவையில் பிரதமர் மோடியைத் தவிர்த்து 21 கேபினட் அமைச்சர்களும், 9 இணை அமைச்சர்களும் (தனிப் பொறுப்பு), 23 இணை அமைச்சர்களும் உள்ளனர்.

தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதால், எந்தெந்த மாநிலங்களில் இருந்து மத்திய அமைச்சர் தேர்வு செய்யப்படவில்லையோ, அந்த மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அந்த மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

யார் யாருக்கு வாய்ப்பு?

பிஹாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் சார்பில் யாருக்கும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஒரு அமைச்சர் பதவி தர பாஜக முன்வந்தபோது அதனை ஏற்க அந்தக் கட்சி மறுத்து விட்டது. எனவே தற்போது ஐக்கிய ஜனதாதளத்துக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக என்று கூறப்படுகிறது.

அக்கட்சியின் மூத்த தலைவர்கள் லாலன் சிங், ராம்நாத் தாக்கூர், சந்தோஷ் குஷ்வா ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

சுஷில் குமார் மோடி

இதனைத் தவிர பாஜக சார்பில் மூத்த தலைவர்கள் சிலர் அமைச்சர்களாக்கப்படலாம் எனத் தெரிகிறது. மகாராஷ்டிராவில் இருந்து நாராயண் ரானே, பிஹாரில் இருந்து சுஷில் குமார் மோடி, குஜராத் மற்றும் பிஹார் பாஜக பொறுப்பாளரான பூபேந்திர யாதவ் ஆகியோர் பெயர்களும் அமைச்சர் போட்டியில் உள்ளன.

அடுத்த ஆண்டு உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் அங்கு கட்சியை பலப்படுத்தும் பொருட்டு அம்மாநில பாஜக எம்.பி.க்களான வருண் காந்தி, ராம்சங்கர் கத்திரியா, அனில் ஜெயின், பகுகுணா ஜோஷி, ஷாபர் இஸ்லாம் ஆகியோர் பெயர்கள் பரிசீலினை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. அங்கு கூட்டணிக் கட்சியான அப்னா தளத்தின் அனுபிரியா படேலுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம்.

காங்கிரஸில் இருந்து விலகிபாஜகவில் இணைந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் அமைச்சர்பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது.

ஜோதிராதித்ய சிந்தியா

அண்மையில் நடந்து முடிந்த மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாத நிலையில் அங்கும் மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

மேற்கு வங்கத்தின் பாஜக தலைவர் திலீப் கோஷுக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெகநாத் சர்க்கார், சாந்து தாக்கூர், நிதித் பிரமாணிக் ஆகியோர் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.

பூபேந்திர யாதவ்

இதனைத் தவிர கர்நாடகாவில் இருந்து பிரதாப் சிம்ஹா, ஹரியாணாவின் பிஜேந்திர சிங், ராஜஸ்தானின் ராகுல் கஷ்வன், ஒடிசாவின் அஸ்வின் வைஷ்ணவ், மகாராஷ்ராவில் பூனம் மகாஜன் அல்லது பிரிதம் முண்டே, டெல்லியில் இருந்து பர்வேஷ் வர்மா அல்லது மீனாட்சி லெஹி ஆகியோர் பெயர்களையும் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x