Last Updated : 30 Jun, 2021 03:41 PM

 

Published : 30 Jun 2021 03:41 PM
Last Updated : 30 Jun 2021 03:41 PM

கேரள டிஜிபியாக அனில் காந்த் நியமனம்: குடியரசுத் தலைவர் விருது பெற்ற அதிகாரி

திருவனந்தபுரம்

கேரள மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அனில் காந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பயின்ற இவர் 1988 ஆம் ஆண்டில் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வானவர்.

தற்போது கேரள டிஜிபியாக இருக்கும் லோகநாத் பெஹேராவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், அனில் காந்த் கேரளாவின் புது டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அனில் காந்த் கேரளாவில் சாலைப் பாதுகாப்பு ஆணையராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனில் காந்த் கேரளாவில் தான் தனது பணியைத் தொடங்கினார். முதன்முதலாக அவர் வயநாடு துணை எஸ்.பி.யாகப் பொறுப்பேற்றார்.
பின்னர் அவர் திருவனந்தபுரம் ஊரக எஸ்.பி.,யாகவும் அதன்பின்னர் ரயில்வே எஸ்.பி.யாகவும் பணியாற்றினார். சில காலம் ஐபி துணை இயக்குநராகப் பணியாற்றினார். டெல்லியிலும், ஷில்லாங்கிலும் இருந்தார். அந்தப் பணியிலிருந்து விடுபட்டுத் திரும்பிய பின்னர் கொச்சி நகர காவல் ஆணையரானார். பின்னர், மலப்புரம் எஸ்.பி.யாகவும் எர்ணாகுளம் எஸ்.பி.யாகவும் இருந்தார்.

திருவனந்தபுரம் சரக சிறப்பு பிரிவு டிஐஜியாகவும் இருந்தார். பின்னர் கேரளாவின் காவலர் குடியிருப்பு கட்டுமானக் கழகத்தின் ஏடிஜிபி ஆனார். மாநில குற்ற ஆவணக் காப்பகத்தினை ஏடிஜிபியாகவும் இருந்தார். சிறைத்துறை தலைவர், ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை தலைவராகவும், போக்குவரத்துத் துறை ஆணையராகவும் இருந்திருக்கிறார். அவர் தனது நேர்மையான மற்றும் சிறப்பான சேவைக்காக குடியரசுத் தலைவர் விருது பெற்றிருக்கிறார்.

64வது அனைத்திந்திய காவலர்கள் விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக ஒருங்கிணைத்ததால் கவுரவிக்கப்பட்டார்.

கேரளாவில், பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரிகள் ஜனநாயகக் கட்சியின் ஆட்சி அமைந்துள்ளது. புதிய அரசு அமைந்துள்ள நிலையில் மாநிலத்தின் டிஜிபியாக அனில் காந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை பதவியேற்பார் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x