Published : 23 Jun 2021 03:11 AM
Last Updated : 23 Jun 2021 03:11 AM
அயோத்தில் ராமர் கோயில் அமைப்பதாக கூறி போலி வலைதளத்தை உருவாக்கி அதன் மூலம் லட்சக்கணக்கில் நன்கொடை வசூலித்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, அயோத்தியில் ராமர் கோயில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கோயில் கட்டுமானத்துக்காக மத்திய அரசு சார்பில் பெரும் பங்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், சில அமைப்புகள் பொதுமக்களிடம் இருந்தும் இதற்காக நிதி திரட்டி வருகின்றன.
இந்நிலையில், ராமர் கோயில்கட்டுமானத்துக்காக சில மர்மநபர்கள் போலியாக வலைதளத்தை உருவாக்கி, பணம் வசூலித்து வருவதாக லக்னோ சைபர்கிரைம் போலீஸாருக்கு சில தினங்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. இதன் பேரில் விசாரணை நடத்தியபோது, இந்த வலைதளமானது நொய்டாவில் இருந்துசெயல்படுவதும் இதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் வசூல்செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, நொய்டா சைபர்கிரைம் போலீஸாரின் உதவியுடன் லக்னோ சைபர் கிரைம் போலீஸார் தேடுதல் வேட்டையை தொடங்கினர். இதில், நொய்டாவின் புறநகர் பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்த 5 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஏராளமான செல்போன்கள், லேப்டாப்கள், 50-க்கும் மேற்பட்ட ஆதார்அட்டைகளின் பிரதிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. போலிவலைதளம் மூலம் திரட்டியபணத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT