‘டெல்டா பிளஸ்’ கவலையளிக்க கூடியதாக  வகைப்படுத்தப்படவில்லை: நிதி ஆயோக் விளக்கம்

‘டெல்டா பிளஸ்’ கவலையளிக்க கூடியதாக  வகைப்படுத்தப்படவில்லை: நிதி ஆயோக் விளக்கம்

Published on

இந்தியாவுக்கு வெளியே புதிதாக கண்டறியப்பட்டுள்ள ‘டெல்டா பிளஸ்’ என்ற மாறுபட்ட கரோனா, கவலையளிக்கக் கூடியதாக இன்னும் வகைப்படுத்தவில்லை என நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே. பால் கூறியுள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் அளித்த பேட்டியில் டாக்டர் வி.கே.பால் கூறியதாவது:

‘டெல்டா பிளஸ்’ என்ற புதிய மாறுபட்ட கரோனா வகை கண்டறிப்பட்டுள்ளது. இதன் தற்போதைய நிலவரம், புதிதாக கண்டறியப்பட்ட வைரஸ் (Variant of Interest (VoI)). இது கவலையளிக்க கூடியதாக Variant of Concern (VoC). இன்னும் வகைப்படுத்தப்படவில்லை. கவலையளிக்கக் கூடிய வகை என்றால், பரவும் வேகம் தீவிரமாக இருக்கும்.

இந்த மாறுபட்ட கரோனா நம் நாட்டில் இருக்கிறதா என்பதை கண்காணித்து, அதற்கேற்ப சுகாதார நடவடிக்கைகளை எடுப்பதுதான் நாம் மேற்கொள்ள வேண்டிய வழி. இந்த மாற்றத்தின் விளைவை நாம் அறிவியல் பூர்வமாக கண்காணிக்க வேண்டும்.

டாக்டர் வி.கே.பால்
டாக்டர் வி.கே.பால்

இந்த மாறுபட்ட வகை கரோனா நம் நாட்டுக்கு வெளியே கண்டறிப்பட்டுள்ளது. இதன் மரபியல் குறித்து ஆராயும் இந்திய கோவிட் கூட்டமைப்பு (இன்சாகாக்) மூலம் கண்காணிக்க வேண்டும். இதுதான், இந்த அமைப்பில் உள்ள 28 ஆய்வு மையங்களின் எதிர்காலப் பணி. இந்த அமைப்பு இதை தொடர்ச்சியாக கண்காணித்து ஆய்வு செய்யும்.

இந்த மாறுபட்ட கரோனா, கட்டுப்பாடு நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நமக்கு நினைவுபடுத்துகிறது.

இந்த மாறுபட்ட கரோனாவை, எந்த ஆயுதம் கொண்டும் அழிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதை கண்காணித்து, அதன் தன்மையை புரிந்து கொண்டு, அதற்கேற்ற தடுப்பு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். இதில் கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், கோவிட் தடுப்பு நடவடிக்கைகளின் அதே விதிமுறைகளும் அடங்கியுள்ளன.

கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம், எந்த வகை மாறுபட்ட கரேனாவையும் சமாளிக்க முடியும். தொற்றுக்கு அடிப்படை காரணம், பரவல் சங்கிலிதான். இந்த பரவல் சங்கிலியை நாம் முறித்துவிட்டால், எந்த வகை மாறுபட்ட கரோனா பரவலையும், நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு டாக்டர் வி.கே.பால் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in