Published : 17 Jun 2021 03:11 AM
Last Updated : 17 Jun 2021 03:11 AM

கரோனா காலத்தில் உதவிய தகவல் தொழில்நுட்பம்: சர்வதேச விவாடெக் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

புதுடெல்லி

கரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழில்நுட்பம் பெரிதும் உதவியது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக கூறினார்.

ஸ்டார்ட்அப் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான டிஜிட்டல் மாநாடு விவாடெக். ஐரோப்பிய நாடுகளில் இது மிகவும் பிரபலம். 2016-ம் ஆண்டிலிருந்து இம்மாநாடு பாரீஸில் நடைபெறுகிறது. இதில் காணொலி முலம் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசிய தாவது:

இந்தியாவும் பிரான்ஸும் பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இவற்றில் முக்கியமானது தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் நுட்பங்களாகும். இப்போதைய காலகட்டத்தில் இரு நாடுகளிடையிலான தொழில்நுட்ப உறவு மேலும் வலுப்பட வேண்டியது மிகவும் அவசியம். இது இந்தியா மற்றும் பிரான்ஸுக்கு மட்டும் நன்மை அளிக்கக்கூடியது அல்ல. உலகம் முழுவதற்கும் நன்மை அளிப்பதாக இருக்கும். இந்தியாவைச் சேர்ந்த இன்ஃபோசிஸ் நிறுவனம் தகவல் தொழில்நுட்பத்தை பகிர்கிறது. அதேபோல பிரான்சின் அடோஸ் நிறுவனம் அதிவிரைவான சூப்பர் கம்ப்யூட்டரை இந்தியாவுக்கு அளித்துள்ளது. இதேபோல பிரான்சின்கேப்ஜெமினி, இந்தியாவின் டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஒருங்கிணைந்து தகவல்தொழில்நுட்ப பகிர்வில் முன்னோடியாகத் திகழ்கின்றன.

உலக நாடுகளுக்கு இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்தது கரோனாதொற்றுதான். இந்த நெருக்கடியைஎதிர்கொள்ள நமக்கு கைகொடுத்தது தகவல் தொழில்நுட்பமும், நவீன மருத்துவமும்தான். கரோனாவுக்கு முந்தைய சூழல் மற்றும் கரோனாவுக்கு பிந்தைய சூழலில் புத்தாக்க நடைமுறைகள் எவ்வளவுதூரம் நமக்கு உதவியாக இருந்தனஎன்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஆதார், மக்களுக்கு டிஜிட்டல் மூலமாக நிதி உதவி அளிக்க பேருதவியாக இருந்தது.

இந்தியாவில் கரோனா தொற்று பரவிய காலத்தில் பல்வேறு மருத்துவ கருவிகள், முகக் கவசங்கள் உள்ளிட்ட தட்டுப்பாடு நிலவியது. இந்த காலகட்டத்தில் ஸ்டார்ட் அப் மற்றும் தனியார் நிறுவனங்களின் செயல்பாடு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x