Last Updated : 13 Jun, 2021 03:52 PM

 

Published : 13 Jun 2021 03:52 PM
Last Updated : 13 Jun 2021 03:52 PM

அடுத்த முதல்வர் யார் என்ற பேச்சுக்கே இடமில்லை; நானே முதல்வராக தொடர்வேன்: எடியூரப்பா திட்டவட்டம்

பெங்களூரு

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ள நிலையில், அவர் தாமே அடுத்த 2 ஆண்டுகளுக்கும் முதல்வராக தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கரோனா வைரஸ் தொற்று நெருக்கடியை சரியாக கையாளாததால் முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்க வேண்டும் என அமைச்சர் யோகேஷ்வர், பாஜக எம்எல்ஏக்கள் அரவிந்த், பசனகவுடா எத்னால் உள்ளிட்டோர் பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.

இதனால் பாஜக மேலிடம் எடியூரப்பாவை மாற்றிவிட்டு மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை முதல்வராக நியமிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா ஹாசனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பு நிவாரண திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

கரோனா 3-வது அலையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம். எனவே எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களைக் கூறி, மக்களை குழப்பக் கூடாது.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட‌ பாஜக மேலிடத் தலைவர்களும் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எல்லாவிதமான சூழலிலும் என்னோடு இருப்பதாக பாஜக மேலிடத் தலைவர் அருண் சிங் அறிவித்திருக்கிறார்.

எனவே அடுத்த முதல்வர் யார் என்ற பேச்சுக்கே இடமில்லை. நானே அடுத்த 2 ஆண்டுகளுக்கும் முதல்வராக தொடர்வேன்.முதல்வராக இருந்து கர்நாடகாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வேன்.

பாஜக மேலிடத் தலைவர்களும், மக்களும் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவேன். சர்ச்சைகளை விவாதிப்பதை விட வளர்ச்சியை நோக்கி பயணிக்க விரும்புகிறேன். பாஜக மேலிட பொறுப்பாளர் அருண் சிங் எனக்கு 100 சதவீத ஒத்துழைப்பை அளிப்பதாக கூறியிருப்பது, எனக்கு யானை பலத்தை கொடுத்துள்ளது.

இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x