Published : 08 Dec 2015 05:47 PM
Last Updated : 08 Dec 2015 05:47 PM
2014-15-ம் ஆண்டில் தங்களது கட்சி ரூ.437 கோடி தொகையை நன்கொடையாக பெற்றுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.
அதாவது இந்தத் தொகை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் ஆகிய பிற கட்சிகளின் ஒட்டுமொத்த நன்கொடையைக் காட்டிலும் இருமடங்குக்கும் அதிகமானது என்று ஜனநாயக சீர்த்திருத்தங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பாஜக நன்கொடையாக பெற்றுள்ள ரூ.437 கோடி தொகையில் பார்தி குழுமத்தின் சத்யா அறக்கட்டளை ரூ.107.25 கோடி வழங்கியுள்ளது. ஆதித்ய பிர்லா குழுமத்தின் அறக்கட்டளை பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு ரூ.117.30 கோடி நன்கொடையாக அளித்துள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைத் தொகை மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் கீழ் வரிவிலக்கு கொண்டது. ரூ.20,000 தொகைக்கு அதிகமான நன்கொடைக்கான விவரங்களை ஒவ்வொரு கட்சியும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளிப்பது கட்டாயமானதாகும்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் 2014-15-ல் அதிக தொகையை நன்கொடையாக அனைத்துக் கட்சிகளுமே பெற்றுள்ளன. ஆனால் அதிக அளவில் ஏற்றம் கண்டது தேசியவாத காங்கிரஸ் (177% அதிகரிப்பு) மற்றும் பாஜக (156% அதிகரிப்பு).
ரூ.20,000 தொகைக்கும் அதிகமாக கட்சிகளுக்கு நன்கொடை வழங்குபவர்களின் முகவரி, நிரந்தர கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அளிப்பது கட்டாயமாகும், ஆனால் இந்த ஆண்டின் நன்கொடையில் பாஜக பெற்ற தொகையில் ரூ.84 லட்சத்துக்கான வழங்குநர் விவரங்கள் அளிக்கப்படவில்லை.
காங்கிரஸ் கட்சி பெற்ற ரூ.20,000த்துக்கும் அதிகமான நன்கொடை தொகைகளுக்கான 98%விவரங்களை அளிக்கவில்லை என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT