Published : 06 Jun 2021 03:11 AM
Last Updated : 06 Jun 2021 03:11 AM

வளர்த்த பாகனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய யானை

கேரளாவின், கோட்டயத்தை சேர்ந்த தாமோதரன் நாயர் என்ற ஓமணசேட்டன் யானை பாகனாக இருந்தார். இவர், கடந்த 25 ஆண்டுகளாக பிரம்மதத்தன் என்ற யானைக்கு பாகனாக இருந்தார். யானையை அதன் பாகன்கள் சங்கிலியால் கட்டிவைப்பார்கள். ஆனால் ஓமணசேட்டன் அன்பு பிணைப்பை மட்டுமே செலுத்திய தால் பிரம்மதத்தனை சங்கிலியால் கட்டியதில்லை.

பிரம்மதத்தனும், ஓமணசேட்டன் சொல்லுக்கு கட்டுப்பட்டு வளர்ந்தது. 60 ஆண்டுகளுக்கு மேல் பாகனாக இருந்த ஓமண சேட்டன் ஆண்டுதோறும் திருச்சூர் ஆடி பூரத்தின் போது நடக்கும் யானைகள் அணிவகுப்பு நிகழ்ச் சிக்கு பிரம்மதத்தனை அழைத்துச் செல்வார்.

கடந்த 2003 மார்ச் 23-ம் தேதி, பூரம் நிகழ்ச்சிக்கு பிரம்மதத்தனை அழைத்துப் போனார். அப்போது பக்கத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு யானை ஓமணசேட்டனை தாக்க முயன்றது. குறுக்கே நின்று தன்னை வளர்க்கும் பாகனைக் காப்பாற்றியது பிரம்மதத்தன் . அப்போது முதலே ஓமணசேட்டனின் மனதில் யானை நீங்காத இடம்பிடித்தது. கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடந்த பூரம் நிகழ்ச்சிதான் பிரம்மதத்தனும், ஓமணகுட்டனும் சேர்ந்து பங்கேற்ற கடைசி நிகழ்ச்சியாகும்.

பிரம்மதத்தன் யானையை முதலில் புதுப்பள்ளியை சேர்ந்த ஒருவர் வளர்த்து வந்தார். அவரிடமிருந்து மனோஜ், ராஜேஷ் சகோதரர்கள் விலைக்கு வாங்கினர். அவர்கள் வீட்டில்தான் ஓமண சேட்டன் பாகனாக இருந்தார். அண்மையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் இருந்த அவரை பார்க்க யானையின் உரிமையாளர் ராஜேஷ் சென்றிருந்தார்.

அப்போது ராஜேஷிடம், தனது வாழ்நாளில் கால் நூற்றாண்டை செலவிட்டு, பிள்ளையைப் போல வளர்த்த யானை பிரம்மதத்தனை ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தார் ஓமணசேட்டன். ராஜேஷும் அதற்கு சம்மதம் தெரிவித்து அழைத்து வருவதாகச் சொன்னார். ஆனால் அடுத்த சில மணி நேரத்திலேயே ஒமண சேட்டன் உயிரிழந்தார்.

பாகனின் கடைசி ஆசையை நிறைவேற்ற, மேலம்பாராவிலுள்ள தனது வீட்டில் இருந்து, லக்கட்டூர் பகுதியில் இருக்கும் பாகன் ஓமண சேட்டனின் வீட்டுக்கு யானையை அழைத்து வந்தார் ராஜேஷ். சுமார் 27 கி.மீ. தொலைவை கடந்து யானை அழைத்து வரப்பட்டது.

ஓமணசேட்டனின் உடல் வீட்டு முற்றத்தில் வைக்கப்பட்டிருந்தது. அந்த சடலத்தைப் பார்த்து சோகத்துடன் சில நிமிடங்கள் நின்ற யானை, அவரது இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் சோகத்தோடு அங்கிருந்து திரும்பியது. தனது துதிக்கையால் அவரது உடலைத் தொட்டும், ஓமண சேட்டனின் மகனைத் தொட்டுத் தழுவியும் ஆறுதல் கூறியது. இதைப் பார்த்ததும் துக்க நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x