Published : 15 May 2021 03:56 PM
Last Updated : 15 May 2021 03:56 PM

மியூகோமிகோசிஸ்- கருப்பு பூஞ்சை தொற்று; கரோனா நோயாளிகள் கவனம் தேவை: மத்திய அரசு வலியுறுத்தல்

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

கோவிட் நோயாளிகளிடம் கண்டறியப்பட்ட மியூகோமிகோசிஸ் (கருப்பு பூஞ்சை தொற்று) பாதிப்பிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

கோவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாக்க சிறந்த முயற்சிகள் எடுத்தாலும், தற்போது, மியூகோமிகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக மற்றொரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி நாம் கட்டாயம் தெரிந்து கொண்டு, அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

மகாராஷ்டிராவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மியூகோமிகோசிஸ் பாதிப்பு இருப்பதாக, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்தார். இதற்கு 10 பேர் பலியாகியுள்ளனர். பல நோயாளிகள் பார்வை இழந்துள்ளனர்.

மியூகோமிகோசிஸ் பாதிப்புக்கு என்ன காரணம்?

மியூகோமிகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை பாதிப்பு, பூஞ்சை தொற்று காரணமாக ஏற்படுகிறது. சுற்றுச்சூழலில் பூஞ்சை வித்துக்களுடன் தொடர்பு ஏற்படுபவர்களுக்கு இந்த மியூகோமிகோசிஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பூஞ்சை தொற்று தோலில் உள்ள காயங்கள் மூலம் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும்.

கோவிட் -19 பாதிப்பிலிருந்து குணமடைபவர்கள் அல்லது குணமடைந்தவர்களிடம் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. நிரிழிவு நோயாளிகளுக்கு, எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் இந்த பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட ஆலோசனைப்படி, கோவிட்-19 நோயாளிகளில் கீழ்கண்ட நிலையில் இருக்கும் கோவிட்-19 நோயாளிகளுக்கு மியூகோமிகோசிஸ் பாதிப்பு அபாயம் அதிகம்.

1) கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயாளிகள், ஸ்டீராய்டு மருந்து பயன்பாடு காரணமாக எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்

2) நீண்ட நாட்களாக ஐசியுவில் இருந்தவர்கள்

3) இணை நோய் உள்ளவர்கள்

4) உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்கள்

5) புற்றுநோய் / தீவிர பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்கள் போன்றோர்.

பொதுவான அறிகுறிகள் என்ன?

நெற்றி, மூக்கு, கன்னத்து எலும்புகள், கண்கள் மற்றும் பற்களுக்கு இடையில் அமைந்துள்ள காற்றுப் பைகளில் தோல் தொற்றுநோயாக மியூகோமிகோசிஸ் வெளிப்படத் தொடங்குகிறது.

கோவிட் -19 நோயாளிகளுக்கு, நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் அல்லது அடக்கும் இம்யூனோமோடூலேட்டிங் மருந்துகளை நிறுத்துமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தனது வழிகாட்டுதல்களில் அறிவுறுத்தியுள்ளது. முறையான சுகாதாரமான சூழலை பராமரிப்பதும், இந்த பாதிப்பை தவிர்க்க உதவும்.

ஆக்சிஜன் சிகிச்சை எடுக்கும் நோயாளிகளுக்கு, ஹூயுமியூடிபயர் சாதனத்தில் தண்ணீர் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யவேண்டும், சீரான இடைவெளியில் தண்ணீர் மாற்றப்பட வேண்டும். நோயாளிகள், கை சுத்தம், உடல் சுத்தத்தை பராமரிக்க வேண்டும்
இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x