Last Updated : 09 May, 2021 08:35 AM

 

Published : 09 May 2021 08:35 AM
Last Updated : 09 May 2021 08:35 AM

ராஜஸ்தானில் கரோனாவில் உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற 150 பேர்: பாதுகாப்பு வழிமுறையின்றி செயல்பட்டதால் 21 பேர் பலி


ராஜஸ்தானில் சிகார் மாவட்டத்தில் கரோனாவில் உயிரிழந்தவரின் உடலைத் தொட்டு, தூக்கி, பாதுகாப்பு வழிகாட்டலை மீறி 150 பேர் பங்கேற்றனர். இந்த 150 பேரில் 21 பேர் கடந்த சிலநாட்களில் கரோனா பாதிப்பில் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இதை சிகார் மாவட்ட நிர்வாகம் மறுக்கிறது. அதில் 21 பேர் இறந்தது உண்மைதான், அதில் 4 பேர் மட்டுமே கரோனா பாதிப்பில் உயிரிழந்தனர் எனத் தெரிவித்துள்ளது.

சிகார் மாவட்டம், கேரவா கிராமத்தில் கடந்த மாதம் 21ம் தேதி கரோனாவில் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். அவரின் உடலை மருத்துவமனை நிர்வாகம் பாலித்தீன் கவரில் சுற்றி, பாதுகாப்பாக அடக்கம் செய்யுமாறு கிராமத்தினரிடம் வழங்கியுள்ளனர். ஆனால், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளையும் மீறி, இந்த இறுதி்ச் சடங்கில் 150 பேர் பங்கேற்றனர்.

அதுமட்டுமல்லாமல் பாலிதீன் கவரில் சுற்றிவைக்கப்பட்டிருந்த கரோனாவில் உயிரிழந்தவரின் உடலை, கவரிலிருந்து வெளியே எடுத்து, தொட்டு, தூக்கி, அதை அந்த கிராமத்தினர் அடக்கம் செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்குப்பின், இறுதிச்சடங்கில் பங்கேற்ற 150 பேரில் 21 பேர் கடந்த சில வாரங்களில் கரோனாவில் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், லட்சுமண்கார்க் மண்டல சுகாதார அதிகாரி குல்ராஜ் மீனா இதை மறுத்துள்ளார். அவர் கூறுகையில் “ கேரவா கிராமத்தில் நடந்த இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களில் 21 பேர் சமீபத்தில் உயிரிழந்ததில் 4 பேருக்கு மட்டுமே கரோனா இருந்துள்ளது, இறந்தவர்களில் பெரும்பலானோர் வயதானவர்கள்.

இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள், அவர்களின் குடும்பத்தாருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு்ள்ளது. சமூகப் பரவல் ஏற்படாமல் தடுக்க கிராமம்முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. கிராம மக்களிடம் கரோனா பரவல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியபின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தனர்” எனத் தெரிவித்தனர்.

சிகார் மாவட்ட மருத்துவ தலைமை அதிகாரி அஜய் சவுத்ரி கூறுகையில் “ கேரவா கிராமத்தில் நடந்த சம்பவங்கள், உயிரிழப்புகள், பாதிப்புகள் குறித்து அறிக்கை அளிக்க உள்ளாட்சி நிர்வாகத்திடம் கேட்டுள்ளேன். அந்த அறிக்கை கிடைத்தபின் விரிவாகப் பதில் அளிக்கிறேன்”எனத் தெரிவித்தார்.

கேரவா கிராமம், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்தி சிங்கின் தோத்ஸரா சட்டப்பேரவைத் தொகுதிக்குள் வருகிறது. கேரவா கிராமத்தில் கரோனாவில் பாதிக்கப்பட்டவரின் உடலை பாதுகாப்பு வழிமுறையின்றி அடக்கம் செய்தார்கள் என்றசெய்திதையும், 20 பேர் உயிரிழந்தார்கள், பலர் பாதிக்கப்பட்டனர் என்பதையும் அவர் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x