Published : 06 May 2021 03:12 AM
Last Updated : 06 May 2021 03:12 AM

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கரோனா நோயாளிகள் இறப்பது இனப்படுகொலைக்குச் சமமானது: அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து

இந்தியாவில் கரோனா தொற்றுகாரணமாக நாளுக்கு நாள் இறப்புகள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரபிரதேச மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பல்வேறு பொது நலன் வழக்குகள் (பிஐஎல்)தொடுக்கப்பட்ட நிலையில் அலகாபாத் நீதிமன்ற நீதிபதிகள்,சித்தார்த் வர்மா, அஜித் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்குகள் விசாரணையில் உள்ளன.

வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் கூறியதாவது: கரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்த செய்திகளை படிக்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. மக்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படும் நேரத்தில் கொடுக்காமல் இருப்பது கிரிமினல் குற்றமாகக் கருதுகிறோம்.

அது ஒரு இன படுகொலைக்கு சமமான குற்றமாகும். ஆக்சிஜன் தட்டுப்பாட்டுக்கு எதிராக உடனே மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x