Published : 01 Dec 2015 09:49 AM
Last Updated : 01 Dec 2015 09:49 AM

விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு உச்ச நீதிமன்ற தடை நீட்டிப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

ஆவின் பாலில் கலப்படம் நடப்ப தாக தேமுதிக தலைவர் விஜய காந்த் குற்றம்சாட்டி இருந்தார். அவர் ஊழல் புகார் கூறியதையடுத்து, அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விஜயகாந்த் நேரில் ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட் டிருந்தது. இதை எதிர்த்து அவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ‘என் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்வதுடன், அவதூறு வழக்கு தொடர வகை செய்யும் சட்டப் பிரிவையே ரத்து செய்ய வேண்டும்’ என்றும் மனுவில் கூறப் பட்டிருந்தது.

இதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், விஜய காந்த் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி பந்த் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசா ரணைக்கு வந்தது. ‘இதுபோன்ற வழக்குகள் தமிழகத்தில் இருந்து தான் அதிக அளவில் வருகின்றன. அரசு நிர்வாகத்துக்கு எதிரான விமர்சனம்தான் இது. இதற்காகவா வழக்கு தொடரப்பட்டுள்ளது. எந்த தனி நபருக்கு எதிராகவும் அவரது விமர்சனம் இடம்பெற்றுள்ளதாக தெரியவில்லை. அவதூறு சட்டப் பிரிவு உருவாக்கப்பட்டதன் நோக்கம் இதுவல்ல’ என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், விஜயகாந்த் மீதான வழக்குக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் நீட்டித்து உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அவதூறு சட்டப் பிரிவை ரத்து செய்யக் கோரி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால். பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி, ராகுல் காந்தி, ஆகியோர் தொடர்ந்துள்ள 27 வழக்குகளை விசாரித்த இதே நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x