Published : 27 Apr 2021 01:24 PM
Last Updated : 27 Apr 2021 01:24 PM

ஒரு கரோனா நோயாளி சமூக விலகலைக் கடைப்பிடிக்காவிட்டால் 406 பேருக்குத் தொற்றைப் பரப்புவார்: மத்திய அரசு எச்சரிக்கை

பிரதிநிதித்துவப் படம்.

புதுடெல்லி

ஒரு கரோனா நோயாளி சமூக விலகல், தனிமைப்படுத்துதலை முறையாகக் கடைப்பிடிக்காமல் இருந்தால், 30 நாட்களில் 406 பேருக்கு கரோனா தொற்றைப் பரப்புவார் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை உச்சத்தை அடைந்து, நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 3.23 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

கரோனா வைரஸ் பரவலில் இருந்து காக்க அனைவரும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் லாவ் அகர்வால்

''பல பல்கலைக்கழங்கள் கரோனா நோயாளிகள் குறித்து நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில், ஒரு கரோனா நோயாளி சமூக விலகல் நடவடிக்கையைப் பின்பற்றாவிட்டால், அடுத்த 30 நாட்களில் அவர் மூலம் 406 பேருக்கு கரோனா தொற்று பரவக்கூடும்.

அதேசமயம், அந்த கரோனா நோயாளி சமூக விலகலைக் கடைப்பிடித்து, கரோனா தடுப்பு விதிகளை 50 சதவீதம் வரை கடைப்பிடித்தால், அடுத்த 30 நாட்களில் அவர் மூலம் 15 பேர் மட்டுமே பாதிக்கப்படுவார்கள்.

அதே கரோனா நோயாளி, சமூக விலகல் விதிகளையும், கரோனா கட்டுப்பாடுகளையும் தீவிரமாகக் கடைப்பிடித்தால், அடுத்த 30 நாட்களில் அவர் மூலம் 2 அல்லது 3 பேர் மட்டுமே பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஒருபுறம் சுகாதாரம் குறித்த நிர்வாக முறையும், மற்றொரு புறம் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதும் அவசியமாகிறது. ஆதலால், மக்கள் வீட்டை விட்டு வெளியேறினால், கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் 6 அடி இடைவெளி விட்டு நின்று பேசினால் கூட தொற்றுக்கு ஆளாகாதவர் பாதிக்கப்படக்கூடும் என்று ஆய்வு கூறுகிறது. இதுவே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும் கரோனா நோயாளிகள், முறையாக முகக்கவசத்தை அணியாவிட்டால், கரோனா நோயாளியிடம் இருந்து 90 சதவீதம் பாதிக்கப்படாத நபர்கள் தொற்றுக்கு ஆளாக நேரிடும்.

தொற்றால் பாதிக்கப்படாத ஒருவர் முகக்கவசம் அணிந்து, முகக்கவசம் அணியாத கரோனா நோயாளியுடன் பேசினால், 30 சதவீதம் தொற்றால் பாதிக்கப்படாத அந்த நபருக்கு கரோனா பரவ வாய்ப்பு உளளது. அதேசமயம், தொற்றுக்கு ஆளான நபரும், தொற்றால் பாதிக்கப்படாத நபரும் முகக்கவசம் அணிந்திருந்து பேசினால், 1.5 சதவீதம் மட்டுமே தொற்றால் பாதிக்கப்படாத அந்த நபர் கரோனாவில் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது''.

இவ்வாறு லாவ் அகர்வால் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x