Published : 22 Apr 2021 03:14 AM
Last Updated : 22 Apr 2021 03:14 AM

திருமலை அஞ்சனாத்ரி மலைதான் அனுமன் பிறந்த திருத்தலம்: ஆதாரங்களாக சில ஆவணங்களை வெளியிட்டு திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை

அனுமன் பிறந்த இடம் குறித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்குவர,  வெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழக துணைவேந்தர் சுதர்சன சர்மா தலைமையில், தேசிய சம்ஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தர் முரளிதர் சர்மா, பேராசிரியர் சதாசிவ மூர்த்தி, இஸ்ரோ விஞ்ஞானி ரேமள்ள மூர்த்தி, ராமகிருஷ்ணா, மாநில தொல்பொருள் ஆராய்ச்சி துறை இணை இயக்குநர் விஜய்குமார் ஆகியோர் தலைமையில் ஒரு கமிட்டியை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி நியமனம் செய்தார்.

அனுமன் எங்கு பிறந்தார் ? அவர் பிறந்ததற்கான ஆதாரங்கள் என்ன என்பது குறித்து புராண, இதிகாசங்கள், சாசனங்கள், கல்வெட்டுகள், மற்றும் ராமாயணத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களை மையமாக வைத்து, பூகோள ரீதியான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டார். அதன்படி, இக்குழுவினர் கடந்த 4 மாதங்களாக தகுந்த ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இறுதியில், அஞ்சனா தேவியின் மைந்தனான அனுமன் பிறந்த இடம் திருமலைதான் என்பதை இக்குழுவினர் ஆதாரங்களாக சில ஆவணங்களுடன் தேவஸ்தான அதிகாரி ஜவஹர் ரெட்டியிடம் அறிக்கையை சமர்ப்பித்தனர்.

இந்த ஆதாரங்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டு ராம நவமி தினமான நேற்று திருமலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டது. தேசிய சம்ஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் முரளிதர் சர்மா பேசுகையில், ‘‘வெங்கடேஸ்வர மகாத்மியம், வராக புராணம், கம்ப ராமாயணம், வால்மீகி ராமாயணம் உள்ளிட்ட பல புராண, இதிகாசங்களில் அஞ்சனா தேவியின் மகனான அனுமன் அஞ்சனாத்ரியில் பிறந்தார் எனகுறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அஞ்சனாத்ரி மலை திருமலையில் உள்ளது. சப்த மலைகளில் அஞ்சனாத்ரியும் ஒன்றாகும். இதனால்தான் மூலவர்ஏழுமலையான் என்றழைக்கப்படுகிறார். திரேதா யுகத்தில் மாதங்கிமகரிஷியின் அறிவுரையின்படி, அஞ்சனா தேவி, வெங்கடாசலத்திற்கு வருகிறார். பின்னர், இங்குள்ள புஷ்கரணியில் குளித்து, வராக சுவாமியை தரிசித்து விட்டு, ஆகாச கங்கை அருகே பிள்ளை வரம் வேண்டி கடும் தவம் புரிகிறார். பல ஆண்டுகள் தவத்தின் பலனாக வாயுபகவானின் அருளோடு அனுமன் அவதரிக்கிறார். அவர் பிறந்த இடம் திருமலையில் உள்ளஜபாலி தீர்த்தமாகும். அங்குதான் அனுமன் பிறக்கிறார். இதனால்தான் இது அஞ்சனாத்ரி மலை என பெயர் பெற்றது. கம்பர், வால்மீகி, வேதாந்த தேசிகர் என பலர் அஞ்சனாத்ரி மலையில்தான் அனுமன் பிறந்தார் என குறிப்பிட்டுள்ளனர். மேலும், 1800-ம் ஆண்டு, திருமலை கோயில் குறித்து வட ஆற்காடு மாவட்டத்தின் முதல் ஆட்சியர் ஸ்டாடன் என்பவர் கூட, அஞ்சனாத்ரி மலை என்றே குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று திருமலையில் 1491-ம் ஆண்டு மற்றும் 1545-ம்ஆண்டு எழுதப்பட்ட கல்வெட்டுகளிலும் அனுமன் இங்குதான் பிறந்தார் என குறிப்பிட்டுள்ளது.  ரங்கத்தில் உள்ள ஒரு கல்வெட்டும் இதனையே குறிப்பிட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள கோயிலில் 20 செப்பேடுகளிலும் அனுமன் பிறந்த ஊர் அஞ்சனாத்ரி என்றே குறிப்பிடப்படுகிறது’’ என்றார்.

தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி பேசுகையில், ‘‘அனுமன் பிறந்த இடம் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் உள்ள ஜபாலி பகுதியில்தான் என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது. விரைவில், அங்குஅனுமனுக்கு கோயில் எழுப்பப்படும். இதற்கு தேவஸ்தான அறங்காவலர் குழுவில் விவாதித்து, ஆந்திர அரசின் அனுமதியோடு ஜபாலி தீர்த்தம் விரிவாக்கம் செய்யப்படும்’’ என கூறினார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகள் செய்ததோடு, ரங்கநாயக மண்டபத்தில், தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x