Published : 24 Dec 2015 01:12 PM
Last Updated : 24 Dec 2015 01:12 PM
டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் சர்ச்சையில் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக பாஜக-விலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கீர்த்தி ஆசாத் அளிக்கவிருக்கும் விளக்கத்தை வடிவமைக்க உதவப்போவதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இது பற்றி கீர்த்தி ஆசாத் கூறும்போது, “நோட்டீஸுக்கு பதில் அளிக்க உதவி செய்வதாக சுப்பிரமணியன் சுவாமி எனக்கு உறுதி அளித்துள்ளார்” என்றார்.
இதனை தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் உறுதி செய்த சுப்பிரமணியன் சுவாமி, “கட்சி கேட்டிருந்த விளக்கத்துக்கு கீர்த்தி ஆசாத்துக்கு உதவி புரிவேன். கீர்த்தி ஆசாத்தை அவரது சிறு பிராயம் முதல் எனக்கு தெரியும். அவரது தந்தை எனக்கு சிறந்த நண்பர். மேலும், கீர்த்தி ஆசாத் இன்னமும் கட்சி உறுப்பினர்தான். எனவே அவருக்கு உதவ எனக்கு அனைத்து உரிமையும் உள்ளது. இவரைப் போன்ற நேர்மையாளரை கட்சி இழந்து விடக்கூடாது” என்றார்.
தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கூறிய கீர்த்தி ஆசாத், “என் மீதான குற்றச்சாட்டு என்ன என்பதை விளக்க வேண்டும். கடந்த சில மாதங்களில் எந்த விதமான கட்சி விரோத செயல்களில் நான் ஈடுபட்டேன் என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரம் மிகவும் சீரியசானது, இதனை எதிர்த்து நான் கடந்த 9 மாதங்களாக போராடி வருகிறேன். நான் ஆம் ஆத்மியுடனோ, காங்கிரஸுடனோ சேரவில்லை.
எனக்கு மோடி மீது நிரம்ப மரியாதையும் நம்பிக்கையும் உள்ளது. எனவே பிரதமர் எனது கோரிக்கையை ஏற்று நீதி வழங்க வேண்டும்.
மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு என்னுடைய தவறு என்ன என்பதை எனக்கு தெரிவிக்க வேண்டும். எனக்கு தெளிவான பதில்கள் வேண்டும். டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்துக்கு எதிராக நான் குரலெழுப்பியதுதான் என்னை நீக்கியதற்குக் காரணமா என்பதை அறிய விரும்புகிறேன். உண்மையைக் கூறுவது குற்றமெனில் அந்தக் குற்றத்தை நான் செய்து கொண்டுதான் இருப்பேன்”
என்று கூறினார் கீர்த்தி ஆசாத்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT