Published : 12 Apr 2021 03:18 AM
Last Updated : 12 Apr 2021 03:18 AM
இந்திய - சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக இரு நாட்டுராணுவ அதிகாரிகள் இடையேநடைபெற்ற 11-வது சுற்று பேச்சுவார்த்தையில், பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண இருதரப்பும் ஒப்புக்கொண்டது.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சீனப் படைகள் அத்து மீறி நுழைய முயன்றன. இது, ஜூன் 15-ம் தேதி இரவு இந்திய – சீன வீரர்கள் இடையே கடும் மோதலில் முடிந்தது. இதையடுத்து எல்லை நெடுகிலும் இருதரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டன.
இதையடுத்து, போர் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளின் ராணுவ கமாண்டர்கள் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடைசியாக கடந்த பிப்ரவரி 20-ம் தேதி நடைபெற்ற 10-வது சுற்று பேச்சுவார்த்தையின் அடிப்படையில், லடாக்கின் பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்கு கரைப் பகுதிகளில் இருந்து இரு தரப்பிலும் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
எனினும், மற்ற பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது குறித்தும் எல்லை பிரச்சினை குறித்தும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. இதன்படி, கடந்த 9-ம்தேதி இருதரப்பு ராணுவ கமாண்டர்கள் நிலையில் 11-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா போஸ்ட் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் உள்ள படைகளை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இரு நாடுகளுக்கிடையே ஏற்கெனவே உள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில், நிலுவையில் உள்ள பிரச்சினைக்கு விரைவாகதீர்வு காண்பது அவசியம் என இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட் டது. எல்லையில் அமைதி நிலவுவதை உறுதி செய்வதுடன் இருதரப்பு உறவை மேம்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தப் பட்டது” என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT