Published : 30 Mar 2021 01:02 PM
Last Updated : 30 Mar 2021 01:02 PM

மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் இன்று பிரச்சாரம் ஓய்வு: கடைசி நாளில் அமித் ஷா தீவிர வாக்கு சேகரிப்பு

நந்திகிராம்

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இறுதி நாளான இன்று மம்தா பானர்ஜி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதுபோலவே பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம் செய்கிறார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.

அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு புறம் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். பிஹார் சட்டப்பேரவையில் நடந்த தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்ற ஏஐஎம்ஐஎம் கட்சி மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிடுகிறது.

இதனால் மேற்கு வங்கத்தில் நாள்தோறும் கட்சித் தலைவர்களுக்கு இடையே பரபரப்பான வாதங்கள், அறிக்கைகள் அனல் பறக்க வெளியாகி வருகின்றன. இதில் முதல்கட்டத் தேர்தல் 27-ம்தேதி நடைபெற்றது. 30 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 7 கட்டத் தேர்தல் நடைபெற வேண்டும்.

2-ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி 30 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் ஒன்றாகும். இங்கு முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், அமைச்சராகவும் இருந்த சுவேந்து அதிகாரி பின்னர் பாஜகவில் இணைந்து அக்கட்சி சார்பில் களமிறங்கியுள்ளார்.

நந்திகிராம் தொகுதியில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இறுதி நாளான இன்று மம்தா பானர்ஜி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் இன்று இரண்டாவது நாளாக பாத யாத்திரை நடத்தி வருகிறார். அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு செல்கிறார். அவரது கட்சித் தொண்டர்களும் உடன் அணி வகுத்துச் செல்கின்றனர்.

அதுபோலவே பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம் செய்கிறார். இதற்காக அமித் ஷா இன்று காலை நந்திகிராம் வருகை தந்தார். அவரை சுவேந்து அதிகாரி வரவேற்றார். தொடர்ந்து அவர் சுவேந்து அதிகாரிக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நந்திகிராம் தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் அவர் வாகனப் பேரணியில் பங்கேற்று சுவேந்து அதிகாரிக்கு ஆதரவு திரட்டுகிறார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x