Published : 30 Mar 2021 03:14 AM
Last Updated : 30 Mar 2021 03:14 AM

பாஸ்போர்ட் தர மறுக்கிறார்கள்: மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

புதிய பாஸ்போர்ட் தர மறுக்கிறார்கள் என்று காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அப்போது அசம்பாவிதங்களை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். தற்போது காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தியின் பாஸ்போர்ட் கடந்த மே 31-ம் தேதியுடன் காலாவதியானது. புதிய பாஸ்போர்ட் கோரி அவர் விண்ணப்பம் செய்திருந்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

சிஐடி அறிக்கையை சுட்டிக் காட்டி பாஸ்போர்ட் அலுவலகம் எனக்கு பாஸ்போர்ட் வழங்க மறுக்கிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு நான் அச்சுறுத்தலாக இருப்பதாக சிஐடி கூறியுள்ளது. ஒரு முன்னாள் முதல்வர் பாஸ்போர்ட் வைத்திருப்பது நாட்டின்இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கிறதாம். காஷ்மீரின் இயல்பு நிலை இப்படித்தான் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் மெகபூபா முப்தி வழக்கு தொடர்ந் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x