Last Updated : 24 Mar, 2021 06:52 PM

 

Published : 24 Mar 2021 06:52 PM
Last Updated : 24 Mar 2021 06:52 PM

உ.பி. ரயிலில் கன்னியாஸ்திரிகளைத் துன்புறுத்தி, பாதியிலேயே இறக்கிவிட்ட பஜ்ரங்தள அமைப்பினர்: பினராயி விஜயன் கண்டனம்

கேரள முதல்வர் பினராயி விஜயன் : கோப்புப்படம்

திருவல்லா

உத்தரப் பிரதேசத்தில் ஜான்ஸி நகரில் கன்னியாஸ்திரிகளைத் துன்புறுத்தி பாதியிலேயே இறக்கிவிட்ட பஜ்ரங் தள அமைப்பினரின் செயலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கன்னியாஸ்திரிகளை அவமானப்படுத்திய விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் உலக அளவில் தேசத்தின் மதிப்பைக் குலைத்துவிடும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்திலிருந்து கன்னியாஸ்திரிகள் சிலர் கடந்த 19-ம் தேதி ஹரித்துவார்-பூரி உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றனர். கடந்த வெள்ளிக்கிழமை ஜான்ஸி நகரில் ரயில் வந்தபோது, ரயிலில் இருந்த பஜ்ரங் தள அமைப்பினர், கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் மத மாற்றம் செய்யச் செல்கிறார்கள் எனக் கூறி அவர்களைத் துன்புறுத்தி, அவமானப்படுத்தி அவர்களைப் பாதி வழியிலேயே ரயிலில் இருந்து இறக்கிவிட்டனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த கன்னியாஸ்திரிகள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, ரயிலில் அவர்களைப் பாதுகாப்பாக ஒடிசாவுக்கு அனுப்பி வைத்தனர்.

ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட கன்னியாஸ்திரிகள்

கன்னியாஸ்திரிகள் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து அறிந்த கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சில், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடிக்கும், உ.பி. முதல்வர் ஆதித்யநாத் கவனத்துக்கும் காங்கிரஸ், பாஜக நிர்வாகிகள் கொண்டு சென்றுள்ளனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதியுள்ளார். அதில், "ரயிலில் இருந்து கன்னியாஸ்திரிகளைப் பாதியிலேயே இறக்கிவிட்ட சம்பவத்துக்கும், அவர்களை அவமானப்படுத்தியதற்கும் கண்டனம் தெரிவிக்கிறேன். சம்பந்தப்பட்ட பஜ்ரங் தள நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய தனிநபர் சுதந்திரத்தைப் பறிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடைய கருத்தில் நீங்கள் உடன்படுவதாக இருந்தால், இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் தேசத்தின் நன்மதிப்பையும், நமது பாரம்பரியமான மத சகிப்புத்தன்மை, வழிபாடு ஆகியவற்றின் மதிப்பையும் கெடுத்துவிடும். இதற்கு உச்சபட்ச கண்டனத்தைத் தெரிவித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பத்தனம்திட்டா மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், "ஒரு மதத்தின் மீது நம்பிக்கையில்லாதவர்களுக்கும், நம்பிக்கை உள்ளவர்களுக்கும் அரசியலமைப்புச் சட்டம் சமமான உரிமைகளை வழங்கியுள்ளது. தங்களின் நம்பிக்கைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் வாழ்க்கையை மாற்றி அமைக்கலாம்.

ரயிலில் கன்னியாஸ்திரிகளுக்கு நடந்த சம்பவம் என்பது அவர்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகும். இது இந்தியர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும். ரயில் பயணத்தின்போது, கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் நடந்த சம்பவம் வேறு எங்கும் நடக்கக் கூடாது. இது தீவிரமான விஷயம். மதத்தின் பெயரால் வன்முறை பல பகுதிகளில் நடக்கிறது. பெண்களுக்கு எதிராகவும், விளிம்புநிலை மக்களுக்கு எதிராகவும் வன்முறைகள் நடக்கின்றன. இந்த விஷயத்தில் உ.பி. மாநிலம் மோசமாக இருக்கிறது. பாஜக அரசில் சட்டவிரோத சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. இதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, கட்டுப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x