Last Updated : 17 Mar, 2021 01:28 PM

 

Published : 17 Mar 2021 01:28 PM
Last Updated : 17 Mar 2021 01:28 PM

தேர்தல் ஆணையத்தின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி சிறுமைப்படுத்தாதீர்கள்: மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையர் காட்டமான பதில்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி

மத்தியில் ஆளும் பாஜக அரசுடன் தேர்தல் ஆணையத்தைத் தொடர்புபடுத்திப் பேசி தேர்தல் ஆணையத்தைச் சிறுமைப்படுத்துவது முறையானது அல்ல. தேர்தல் ஆணையத்தின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளைக் கூறி, அவமானப்படுத்திக் கேள்விக்குள்ளாக்குவதை விரும்பவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் மூலம் பதில் அளித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. வரும் 27-ம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாங்குரா மாவட்டத்தில் நேற்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்தின் மீது பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளைக் கூறினார். அவர் பேசுகையில், "தேர்தல் ஆணையம் தனது சுதந்திரத்தன்மையை இழந்துவிட்டதா என எனக்கு வியப்பாக இருக்கிறது. தேர்தல் ஆணையம்கூட அமித் ஷாவின் கட்டளைப்படிதான் இயங்குகிறது. தேர்தல் ஆணையத்துக்கு அமித் ஷாதான் கட்டளைகளை வழங்குகிறார். ஆணையத்தின் சுதந்திரம் என்ன ஆயிற்று" எனக் கேள்வி எழுப்பினார்.

மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து, மேற்கு வங்கத் தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு ஆணையர் சுதிப் ஜெயின் நேற்று அவருக்குக் கடிதம் எழுதினார். சமீபத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிப் பிரதிநிதிகள் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து சுதிப் ஜெயினை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தச் சூழலில் சுதிப் ஜெயின், மம்தா பானர்ஜிக்குக் காட்டமாகக் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

''தேர்தல் ஆணையம் தனது சுயத்தன்மையைப் பராமரிக்கிறது. எந்தக் கட்சியுடனும் தேர்தல் ஆணையத்தை இணைத்துக் குற்றம் சாட்டிக் கேள்விக்குள்ளாக்குவதை விரும்பமாட்டோம். தேர்தல் ஆணையத்தைச் சிறுமைப்படுத்துவது முறையானது அல்ல. தேர்தல் ஆணையத்தின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளைக் கூறி அவமானப்படுத்திக் கேள்விக்குள்ளாக்குவதை விரும்பவில்லை.

முதல்வர் மம்தா பானர்ஜி தான் விரும்பும் காரணங்களுக்காகத் தொடர்ந்து ஏதாவது கட்டுக்கதைகளை உருவாக்க முயற்சி செய்தால் அது துரதிர்ஷ்டமானது. எதற்காக முதல்வர் இவ்வாறு செய்கிறார் என்பதற்கு அவர் மட்டுமே பதில் அளிக்க முடியும்.

பாங்குரா பொதுக்கூட்டத்தில் நீங்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியபின், அதற்கான பதிலும் கடந்த 14-ம் தேதி தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது.

உங்களின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி, இசட் பிளஸ் பொறுப்பாளரை, தலைமைச் செயலாளர், டிஜிபியுடன் ஆலோசித்து விரைவாக நியமிக்க வேண்டும் என்று ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளோம். அந்த உத்தரவின்படி புதிய பாதுகாப்பு அதிகாரியாக கியான்வந்த் சிங் பாதுகாப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுவிட்டார்.

இந்த நியமனத்துக்கு முன் தலைமைச் செயலாளர் உங்களுடன் ஆலோசித்து, உங்களின் ஒப்புதல் பெற்றபின்தான், உள்துறை அமைச்சரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக மாற்றங்கள் செய்கிறது என்று கடிதங்கள் மூலம் மீண்டும் மீண்டும் அவதூறு பரப்பப்படுகிறது. இவ்வாறு கருத்து கூறுவது தேவையில்லாதது. எங்களைப் பொறுத்தவரை வாக்காளர்களுக்குத்தான் முதலில் முக்கியத்துவம். அரசியல் கட்சிகளுக்கு 2-வதாகத்தான் முக்கியத்துவம் அளிப்போம்''.

இவ்வாறு சுதிப் ஜெயின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x