Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM

தேர்தலில் சீட் தராததால் மொட்டை அடித்துக் கொண்ட மகளிர் காங்கிரஸ் நிர்வாகி: கேரளாவில் சுயேச்சையாக களமிறங்குவதால் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு சிக்கல்

கேரளத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இது போதாதா காலம்போலிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு மூத்த தலைவர்களில் ஒருவரான பி.சி.சாக்கோகாங்கிரஸில் இருந்து வெளியேறினார். இப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் கேரள மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவி லத்திகா சுபாஸ் கட்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.

கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஏற்றுமானூர் தொகுதியில் போட்டியிட மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவி லத்திகா சுபாஸ்சீட் கேட்டிருந்தார். கட்சி தனக்குசீட் தரும் என நம்பி தொகுதிக்குள் தேர்தல் பணியும் செய்துவந்தார். இந்நிலையில் கட்சி இவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் தன் ஆதரவாளர்கள் முன்னிலையில் காங்கிரஸ் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலக வாசலில் அமர்ந்து மொட்டை போட்டுக் கொண்டார்லத்திகா. ஆனால் அதன் பின்னரும் கட்சித்தலைமை கண்டுகொள்ளா ததால் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்து ஏற்றுமானூர் தொகுதியில் களப்பணியாற்றி வருகிறார்.

இதுதொடர்பாக லத்திகா சுபாஸ் ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறுகையில், ‘‘மகளிர்காங்கிரஸ் நிர்வாகிகள், ஊழியர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள காங்கிரஸ் தலைமை தவறிவிட்டது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. இதை பெண்களுக்கு எதிரான திட்டமிட்ட புறக்கணிப்பு என்பதாக புரிந்துகொள்கிறேன். மகளிர் காங்கிரஸ் பிரிவில் இருக்கும் ஒருவருக்குக்கூட கட்சியில் சீட் கொடுக்கவில்லை. அதனால்தான் கட்சிக்கு என் எதிர்ப்பைக் காட்டமொட்டையடித்தேன். இது எனக்காக நான் நடத்திய போராட்டம் அல்ல. மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்துக்கான போராட்டம். மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆகிய பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டேன். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோருக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்’’என்று தெரிவித்தார்.

பிடிவாதம் செய்தார்

லத்திகா சுபாஸ் விவகாரம் குறித்து முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி கூறும்போது, ‘லத்திகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சூழல் இப்போது இல்லை. அவர் ஏற்றுமானூர் தொகுதியை மட்டுமே கேட்டு அழுத்தம் தந்தார். ஐக்கிய ஜனநாயக முன்னணி (யு.டி.எப்) கூட்டணியில் இருக்கும் கேரள காங்கிரஸும் (ஜோசப்) அதே தொகுதியைக் கேட்டார்கள். அவர்கள் அந்தத் தொகுதியை விட்டுக் கொடுப்பதாக இல்லை. அதனால்தான் ஏற்றுமானூர் தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

அதேநேரத்தில் வேறு தொகுதியை லத்திகாவுக்கு ஒதுக்குவது குறித்த பரிசீலனைக்குக் கூட அவர் நேரம் தரவில்லை. கடைசியில் வேட்பாளர்களே அறிவிக்கப்பட்ட பின்னர் மாற்றுவழி சொல்கிறார். இது தரதிஷ்ட வசமானது’ என கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால், ‘தன்னிடம் வேறு தொகுதியில் போட்டியிடுவது குறித்து யாரும் கேட்கவில்லை. கேரள காங்கிரஸ் (ஜோசப்) கட்சியினர் இந்தத் தொகுதியைக் கேட்கவே இல்லை. காங்கிரஸ் கட்சிதான் இதை கூட்டணிக்கு தள்ளிவிட்டது. நான் மூத்தத் தலைவர் ஏ.கே.ஆன்டனியையும் சந்தித்து எனக்கு இந்தத் தொகுதியை ஒதுக்காவிட்டால் மொட்டை போட்டுக் கொள்வேன் என அப்போதே சொல்லியிருந்தேன். கேரளத்தில் 14 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத்துக்கு ஒருபெண்ணுக்கு சீட் கொடுத்திருந் தால்கூட 14 பேருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை’ என்கிறார் லத்திகா சுபாஸ்.

லத்திகா சுபாஸுக்கு தொகுதிக்குள் சொந்த செல்வாக்கு அதிகம். பல்வேறு சேவை அமைப்புகளோடு இணைந்து பணிசெய்த அனுபவமும் அவருக்கு இருக்கிறது. இதனாலேயே ஏற்றுமானூரில் ஐக்கிய ஜனநாயக முண்ணனி சார்பில் போட்டியிடும் கேரள காங்கிரஸ்(ஜோசப்) கட்சியின் வேட்பாளர் பிரின்ஸ் ஜார்ஜ் கலக்கத்தில் உள்ளார். அவர் நேரடியாக லத்திகாவின் வீட்டுக்கே போய் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை.

1987ம் ஆண்டு இதே தொகுதியில் சீட் கிடைக்காத காங்கிரஸ் நிர்வாகி ஜார்ஜ் ஜோசப் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதே சூழல் தனக்கும் திரும்பும் என யூகிக்கிறார் லத்திகா. ஆனால் அது எல்.டி.எப்.க்கு சாதகமாகும் என பதற்றமடைகிறது கேரள காங்கிரஸ் ஜோசப் பிரிவு.

மாற்றத்தை நோக்கி காங்கிரஸ்

கேரளத்தில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இளம் வேட்பாளர் களைக் களம் இறக்கி வெற்றியைக் குவித்தது மார்க்சிஸ்ட் கட்சி. அதேபோல் இந்த தேர்தலில் புதுமுகவேட்பாளர்கள் என்னும் அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது காங்கிரஸ். அதன்படி 55 சதவீதம் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் காயங்குளம் தொகுதிக்கு எளிமையான குடும்பப்பிண்ணயில் இருந்து வந்த26 வயதே ஆன அரிதாபாபுவை வேட்பாளராக்கியுள்ளது காங்கிரஸ். அறிவிக்கப்பட்ட 86 வேட்பாளர்களில் 10 பெண்களுக்குகாங்கிரஸ் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. உம்மன்சாண்டி வழக்கம்போல் புதுப்பள்ளித் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பாஜகவில் எனக்கு சீட்டா? பழங்குடி இளைஞர் நிராகரிப்பு!

காங்கிரஸ் கட்சியில் சீட்டுக்காக மொட்டையடித்து போராடிக்கொண்டிருக்க பாஜக முகாமிலோ சீட் அறிவிக்கப்பட்ட பழங்குடி இளைஞர் அதை வேண்டாமென நிராகரித்துள்ளார். மானந்தவாடி தொகுதி வேட்பாளராக மணிகண்டன் என்ற மணிக்குட்டனை பாஜக அறிவித்தது. இதை தொலைக்காட்சியில் பார்த்த மணிகண்டன் அதிர்ச்சியடைந்தார். கேரள கால்நடை பல்கலைக் கழகத்தில் உதவி பயிற்றுநராக இருக்கும் மணிகண்டன் பாஜகவில் சீட் கேட்கவே இல்லை.

பனியா பிரிவைச் சேர்ந்த பழங்குடி இளைஞரான மணிகண்டன், ‘தேர்தலில் போட்டியிட நான் விரும்பவில்லை. கட்சி அரசியலில் நான் நுழைவதும் கடினம். சில பாஜக தலைவர்கள் சீட் கொடுப்பது பற்றி என்னிடம் போனில் கேட்டபோதும் நான் சம்மதிக்கவில்லை. இருந்தும் திடீரென டிவியில் என் பெயர் ஓடியது. வேட்பாளர் அறிவிப்புக்கு பின்பே நேரில் வந்தே சந்தித்தனர். அப்போதும் நான் பாஜக ஆதரவாளர் இல்லை என விளக்கினேன். வேட்பாளராக அறி விக்கும் முன்பு நேரில் வந்து சந்தித்து இருந்தால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்காது. எது எப்படியோ வயநாட்டில் பெரிய பழங்குடி சமூகமான ‘பனியா’வில் இருந்து வேட்பாளரை நிறுத்த பாஜக முடிவுசெய்தது பெருமைக்குரிய விசயம்தான்.’என்றார். பனியா பழங்குடி சமூகத்தின் முதல் எம்.பி.ஏ பட்டதாரி மணிகண்டன்தான் என்பது கூடுதல் தகவல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x