Last Updated : 16 Mar, 2021 01:09 PM

 

Published : 16 Mar 2021 01:09 PM
Last Updated : 16 Mar 2021 01:09 PM

குஜராத் கலவரம்; பிரதமர் மோடிக்கு எஸ்ஐடி நற்சான்று அளித்த வழக்கில் ஏப்ரல் 13-ம் தேதி விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி

2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தை விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு, பிரதமர் மோடி உள்ளிட்ட 59 பேருக்குத் தொடர்பில்லை என விடுவித்தது. இதை எதிர்த்து முன்னாள் எம்.பி. ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி தொடர்ந்த வழக்கு வரும் ஏப்ரல் 13-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது.

இந்த வழக்கு இனிமேலும் ஒத்திவைக்கப்படாது, ஏப்ரல் 13-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2002-ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோத்ரா எனுமிடத்தில் கரசேவகர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் மதக் கலவரம் மூண்டது.

அப்போது குல்பர்க்கா சொசைட்டி பகுதியில் நடந்த வன்முறையில் 68 பேர் கொல்லப்பட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாப்ரியும் கொல்லப்பட்டார். அதன்பின் கலவரத்தை அடக்க ராணுவம் வரவழைக்கப்பட்டுக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தச் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.

அந்த சிறப்பு விசாரணைக் குழு 2012-ம் ஆண்டு, டிசம்பர் 8-ம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில், அப்போது முதல்வராக இருந்த மோடி, போலீஸ் அதிகாரிகள் பலர் உள்ளிட்ட 59 பேர் மீது எந்தவிதமான குற்றமும் இல்லை எனத் தெரிவித்தது.

எஸ்ஐடியின் அறிக்கையை மறு ஆய்வு செய்யக்கோரி அகமதாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், குஜராத் உயர் நீதிமன்றத்திலும் ஜாகியா ஜாப்ரி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ஜாகியா ஜாப்ரி, சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வத் ஆகியோர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மனுதாரர் ஜாகியா ஜாப்ரி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடி வருகிறார். 2018-ம் ஆண்டு இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.

ஜாகியா ஜாப்ரி

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பின் விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதற்கு மனுதாரரின் வழக்கறிஞர் கபில் சிபலும் சம்மதித்தார். ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஷ்வரி, கிருஷ்ணா முராரி ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஜாப்ரி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.

வழக்கறிஞர் கபில் சிபலைப் பார்த்து நீதிபதிகள் அமர்வு, "வழக்கறிஞர்கள் அனைவரும் மராத்தா இட ஒதுக்கீடு வழக்கின் விசாரணையில் பரபரப்பாக இருப்பதால், ஏப்ரல் மாதம் விசாரணைக்கு எடுக்கிறோம்" என்றனர்.

குஜராத் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கை அடுத்த வாரமே விசாரணைக்கு எடுக்க வேண்டும், ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைக்க எதிர்ப்பு தெரிவித்தார்.

சிறப்பு விசாரணைக் குழுவின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, விசாரணையை ஒத்திவைக்க எதிர்ப்பு தெரிவித்து, வழக்கின் விசாரணை முடிவு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதிகள் அமர்வு, "இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 13-ம் தேதி உறுதியாக விசாரணைக்கு எடுக்கப்படும். இதற்குமேல் ஒத்திவைக்கப்படாது, அதற்கான கோரிக்கைகளும் ஏற்கப்படாது" எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x