Published : 16 Feb 2021 03:11 AM
Last Updated : 16 Feb 2021 03:11 AM
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
கரோனா வைரஸுக்கு எதிராக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இந்திய மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 80 முதல் 85 சதவீதம் வரையிலான சுகாதாரப் பணியாளர்களுக்கு இவை செலுத்தப்பட்டுள்ளன.
இந்த தடுப்பு மருந்துகளால் தற்போது வரை எந்த உயிரிழப்போ அல்லது கடுமையான பக்க விளைவுகளோ ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி, தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு மாதத்துக்குள்ளா கவே, கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதுவே இந்தியாவுக்கும், நமது சுகாதாரத் துறைக்கும் கிடைத்திருக்கும் உண்மையான வெற்றியாகும்.
இன்றைய சூழலில், நம் நாட்டில் 18 முதல் 19 கரோனா தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட சோதனைகளில் இருக்கின்றன. எனவே, அடுத்த 2 – 3 மாதங்களில் புதிய கரோனா தடுப்பு மருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
தற்போதைய பட்ஜெட்டில் தடுப்பு மருந்துகளுக்கு மட்டும் ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் ஏதேனும் புதிய நோய்கள் வந்தால் கூட அதனை வெற்றிகரமாக சமாளிக்கும் கட்டமைப்பை இதன் மூலம் நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும். இவ்வாறு ஹர்ஷ்வர்தன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT