Published : 09 Nov 2015 03:02 PM
Last Updated : 09 Nov 2015 03:02 PM
டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சந்தித்தார்.
இடஒதுக்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பேசியதே பிஹாரில் பாஜக படுதோல்வியை சந்திக்க முக்கிய காரணம் என பலரும் விமர்சிக்கின்றனர்.
கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாராயண யாதவ் கூறும்போது, "இடஒத்துக்கீடு முறையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற முறையையே மகா கூட்டணியினர் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். அதன் காரணமாகவே பாஜக தோல்வியை தழுவியது" என்றார்.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது, பிஹார் தேர்தல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது.
ஆனால் கட்சி வட்டாரத்தில் இந்தச் சந்திப்பு குறித்து விசாரித்தபோது, "ஆர்.எஸ்.எஸ். தலைவர் எப்போதெல்லாம் டெல்லி வருகிறாரோ அப்போதெல்லாம் அவரை பாஜக தேசியத் தலைவர் சென்று சந்திப்பது வழக்கமான ஒன்றே. ஆனால், பிஹார் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இந்தச் சந்திப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது" எனக் கூறப்பட்டது.
இதற்கிடையே, பிஹார் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க பாஜக ஆட்சிமன்ற குழு கூட்டப்பட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின்னர் பாஜக இரண்டாவது பெரிய தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT