Published : 17 Nov 2015 09:29 AM
Last Updated : 17 Nov 2015 09:29 AM
குஜராத்தில் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாத காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் கழிப்பறை வசதி உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும். இது தொடர்பாக, உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் கடந்த ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 22 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் நவசாரி மாவட்டம், கந்தேவி தாலுகா பஞ்சாயத்து தேர்தலில், அஜ்ராய் பஞ்சாயத்து வார்டுக்கு காங்கிரஸ் சார்பில் அசோக் டலவியா என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அவரது வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்று பாஜக வேட்பாளர் ராகேஷ் படேல் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து அசோக் வீட்டில் ஆய்வு செய்த அதிகாரிகள், ராகேஷ் படேலின் புகார் உண்மை என உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து அசோக் வேட்பு மனுவை மாநில தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது. இதனால் பாஜக வேட்பாளர் ராகேஷ் படேல் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT