Published : 07 Feb 2021 03:13 AM
Last Updated : 07 Feb 2021 03:13 AM
எல்லைப் பிரச்சினை விவகாரத்தில் சீனாவுடன் இதுவரை 9 சுற்றுபேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே பதற்றம் நிலவி வருகிறது. கடந்த மே மாதம் கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கல்வான் மோதலுக்குப் பின் நிலைமை மோசமடைந்தது. அப்போது நடந்த தாக்குதலில் சீன ராணுவத்தால் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் எல்லையில் அதிக அளவில் ராணுவத்தைக் குவித்து வருகின்றனர். இதன் காரணமாக எல்லையில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும், எல்லையிலிருந்து இன்னும் பெரிய அளவில் ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்படவில்லை.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேற்றுமத்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எனவே எல்லையிலிருந்து நமது ராணுவ வீரர்களை திரும்பப் பெறுவது என்பது சிக்கலான விஷயம்.
எல்லைப் பகுதியில் நமதுராணுவ தளபதிகள் புவியியலை தெளிவாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் எந்தெந்த வீரர்கள் எந்த இடங்களில் உள்ளனர் என்பது நமக்குதெளிவாகத் தெரியும். அப்படித் தெரிந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை 9 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இதில் சிறியமுன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT