Published : 06 Feb 2021 03:16 AM
Last Updated : 06 Feb 2021 03:16 AM
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதி கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவின் என்ற செயலியின் மூலம் தடுப்பூசி நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த செயலியில் முன்பதிவு செய்தோருக்கு எந்த நாளில் எப்போது தடுப்பூசி போட வர வேண்டும் என்பது குறித்து எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது:
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 37 லட்சம் பேருக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பதில் அளிக்காத 5,12,128 பேருக்கு செல்போனில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக கரோனா தடுப்பூசி நடைமுறை திருப்தி அளிக்கிறது என்று 97 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மையத்தில் தனி மனித இடைவெளி பின்பற்றப்படுகிறதா என்ற கேள்விக்கு 98 சதவீதம் பேர் முழு திருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு 30 நிமிடங்கள் கண்காணிப்பில் இருந்ததாக 97 சதவீதம் பேர் கூறியுள்ளனர். எனினும் தடுப்பூசி குறித்த நடைமுறைகள் முறையாக தெரிவிக்கப்படவில்லை என்று 11 சதவீதம் பேர் வருத்தத்தையும் பதிவு செய்துள்ளனர்.
தடுப்பூசி போட்டுக் கொள்ள இதுவரை ஒரு கோடி சுகாதாரப் பணியாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதில் 45 சதவீதம் பேருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT