Last Updated : 03 Feb, 2021 03:15 PM

 

Published : 03 Feb 2021 03:15 PM
Last Updated : 03 Feb 2021 03:15 PM

ஜார்க்கண்ட்டில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார பணியாளர் உயிரிழப்பு: மரணத்திற்கு காரணம் என்ன? - விசாரணை

ராஞ்சி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட 36 மணி நேரத்திற்குப் பிறகு சுகாதார பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். இருப்பினும் அவரது மரணத்திற்கு காரணம் குறித்து விசாரணைக்கு பிறகே தெரிய வரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கரோனா தடுப்புக்காக கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் அவசர கால பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கப்பட்டது.

நேற்று மாநிலங்களவையில் உரையாற்றிய மத்திய சுகாதார இணையமைச்சர் அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், நாடுமுழுவதும் 92,61,227 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி சுகாதாரப் பணியாளர் மன்னு பஹான் என்பவருக்கு ராஞ்சியில் உள்ள அவரின் பணியிட மருத்துவமனையில் கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கப்பட்டது. அவர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தனியார் மருத்துவ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பங்கஜ் சாஹ்னி கூறியதாவது:

ராஞ்சியில் உள்ள மெடந்தா மருத்துவமனையில் பணியாற்றி வந்த மன்னு பஹானுக்கு திங்களன்று அங்கேயே கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கப்பட்டது. மன்னு பஹான் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். 52 வயதான பஹானுக்கு இணைநோய்கள் இல்லை என்றாலும், அவரது மரணத்திற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர், பஹான் ராஞ்சிக்கு அருகிலுள்ள ஓர்மஞ்சியில் உள்ள தனது கிராமத்திற்குத் திரும்பினார், பிப்ரவரி 2 ஆம் தேதி கூட அவர் வேலைக்கு வந்தார்.

இவ்வாறு பங்கஜ் சாஹ்னி தெரிவித்தார்.

இதுகுறித்து ஜார்க்கட் மாநிலத்தின் கோவிட் -19 தடுப்பூசி திட்டத்திற்கான அதிகாரி டாக்டர் அஜித் பிரசாத் பிடிஐயிடம் கூயிதாவது:

''செவ்வாய்க்கிழமை இரவு அவர் தனது கிராமத்தில் உடல்நலம் குன்றிய பிறகு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்தார். அவரது மரணத்திற்கான காரணத்தை அறிய, அரசு நடத்தும் ராஜேந்திர மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் மருத்துவ வாரியத்தால் உடலில் பிரேத பரிசோதனை நடத்தப்படும். பிப்ரவரி 1 ம் தேதி பஹான் உட்பட மொத்தம் 151 சுகாதார ஊழியர்களுக்கு மெடந்தா மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டது.

பஹானுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின் ஒன்பது பேர் தடுப்பூசி பெற்றனர், அவர்கள் அனைவரும் நன்றாக உள்ளனர். எனவே, தடுப்பூசி காரணமாக அவர் இறந்தாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தடுப்பூசி காரணமாக பஹான் இறந்தார் என்று கண்டறியப்பட்டால், ஜார்க்கண்டில் இதுபோன்ற முதல் பாதிப்பு இதுவாகும்.

இவ்வாறு டாக்டர் அஜித் பிரசாத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x