Published : 02 Feb 2021 10:17 AM
Last Updated : 02 Feb 2021 10:17 AM

விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு; எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு

புதுடெல்லி

விவசாய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை 10.30 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். பின்னர் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இதனை தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை மாநிலங்களவை கூடியது. அப்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

அவையின் அனைத்து அலுவல்களையும் ஒத்தி வைத்து விட்டு விவசாயச் சட்டங்களை திரும்பப் பெறும் தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

ஆனால் விவசாயச் சட்டங்கள் குறித்து விவாதிக்க புதன் கிழமை ஒதுக்கப்பட்டுள்ளதால் மற்ற அலுவல்கள் நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான வெங்கய்ய நாயுடு கூறினார். ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் அவை 10.30 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x