Published : 02 Feb 2021 03:17 AM
Last Updated : 02 Feb 2021 03:17 AM

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான, மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்: தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக, மக்களுக்கு ஏமாற்றம் தரும்வகையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தைப் பல வழிகளிலும் புறக்கணித்த மத்திய அரசு, தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் வருவதை முன்னிட்டு, மெகா திட்டங்களை நிறைவேற்றப் போவதாக அறிவித்திருந்தாலும் பட்ஜெட் அறிவிப்புகளில் தெளிவு இல்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது. “தமிழகத்தில் ரூ. 1.03 லட்சம் கோடியில் 3,500 கிலோ மீட்டர் சாலைகள்” என்று கூறப்பட்டிருந்தாலும் அதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

“சென்னை - சேலம்” பசுமை வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று அறிவித்திருப்பது மத்திய அரசின் பிடிவாதத்தை காட்டுகிறது. வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக பெட்ரோல், டீசலுக்கு புதிதாக செஸ் வரி விதிக்கப்பட்டிருப்பதால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடி பண உதவி செய்வது குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழக மக்களுக்கு ஒரு மாய லாலிபாப் கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர, அந்த லாலிபாப் உண்மையானது அல்ல. கைவரக் கூடியதல்ல என்பதை நிதி நிலை அறிக்கையின் வாசகங்கள் நிரூபிக்கின்றன. விவசாயிகள், வேலையில்லா இளைஞர்கள், தொழிலாளர்கள், ஏழை, நடுத்தர மக்கள் அனைவருக்கும் பயனில்லாத, ஒரு சில பகட்டு அறிவிப்புகளைக் கொண்ட பட்ஜெட் இது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: நேரு காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் கோயில்கள் என்று கருதி வளர்த்தெடுக்கப்பட்டன. ஆனால், மோடிஆட்சியில் பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகின்றன. பொதுத் துறை நிறுவனங்களின் சொத்து என்பது மக்களின் சொத்து. இதை தனியாருக்கு விற்பதை அனுமதிக்க முடியாது. பாஜகவின் பட்ஜெட் ஏழை, எளியவர்களுக்கு எதிரானது.

பாமக நிறுவனர் ராமதாஸ்: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வளர்ச்சிக்கான திட்டங்களும், விவசாயிகளின் அச்சத்தைப் போக்கும் வகையிலான சில நடவடிக்கைகளும் வரவேற்கத்தக்கவை. அதே நேரத்தில் வருமானவரி குறைக்கப்படாதது, நிதிப் பற்றாக்குறை, கடன் சுமை அதிகரித்திருப்பது ஆகியவை கவலை அளிக்கின்றன. ரூ. 1.03 லட்சம் கோடியில் 3,500 கி.மீ. நீள சாலைகள், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.63,246 கோடி என்று தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் வரவேற்கத்தக்கவை.

மொத்தத்தில் மத்திய பட்ஜெட் வளர்ச்சியை இலக்காக கொண்டிருப்பது மகிழ்ச்சி அளித்தாலும், ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அம்சங்கள் கட்டுப்படுத்தப்படாதது மிகவும் கவலை அளிக்கிறது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான எந்த வழிமுறையும் மத்திய பட்ஜட்டில் இல்லை. கடந்த 2020 நவம்பர் வரை ரூ. 7 லட்சம் மட்டுமே வரி வருவாய் கிடைத்துள்ளது. இந்த வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கான வழிகளும் பட்ஜெட்டில் இல்லை. சேலம் - சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்தை தொடருவோம் என்று அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மதுரை - கொல்லம் நெடுஞ்சாலை, ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் ஏமாற்றம் தரும் பட்ஜெட் இது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் பெரும் ஏமாற்றமளிப்பதோடு, வெறும் வார்த்தைகளின் தொகுப்பாக மட்டுமே உள்ளது. வளர்ச்சி, வாழ்வாதாரத் தேவைகளுக்கான வருவாயைப் பெருக்குவதற்கு எந்தவொரு உருப்படியான ஆலோசனைகளையும் பட்ஜெட் முன்வைக்கவில்லை. ஊரக வேலை உறுதித் திட்ட நாட்களை 200 ஆக அதிகரிக்க வேண்டும் என்றகோரிக்கை ஏற்கப்படவில்லை. ஏற்கெனவே உள்ள சாலைகளை மேம்படுத்தாமல், புதிய சாலை திட்டங்களை அறிவிப்பதால் எந்தப் பலனும் இல்லை. மொத்தத்தில் இது கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: கரோனாநெருக்கடி, வேலையின்மை, விவசாயிகளின் பிரச்சினை, விலைவாசி உயர்வு என்று மக்கள் எந்தப் பிரச்சினைக்கும் மத்திய பட்ஜெட்டில் திட்டங்களும், தீர்வுகளும் இல்லை. விவசாயத் துறைமுன்னேற்றுத்துக்காக டீசல் விலையில் லிட்டருக்கு ரூ. 4, பெட்ரோல் விலையில் ரூ. 2.50-ம் வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பு, விவசாயிகளின் போராட்டத்தைக் காட்டி நுகர்வோர் மீது சுமையை ஏற்றும் அரசியல் சதியாகும். வழக்கம்போல பெரு நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்: முதல் முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மக்களுக்கு பயனில்லாத பட்ஜெட். பெரு நிறுவனங்களுக்கு நாட்டை விற்க வழிசெய்யும் பட்ஜெட். 7 பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்து பற்றாக்குறையை ஈடு செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயக்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் மீதும் செஸ் வரியை திணிப்பது கண்டனத்துக்குரியது. சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் மாநிலங்களைக் குறித்து சில திட்டங்களை அறிவித்துள்ளனர். இது அரசியல் ஆதாயத்துக்கான வெற்று அறிவிப்பு. தலித் மக்கள் முன்னேற்றுத்துக்கான எந்த அறிவிப்பும் இல்லை.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவிதினகரன்: கொஞ்சம் மகிழ்ச்சி, நிறையகவலைகளைத் தரும் அறிவிப்புகளின் கலவையாக மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. 3,500 கி.மீ நீள சாலைகள், மதுரை - கொல்லம் பொருளாதார வழித்தடம், சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கு ரூ.63,246 கோடி, சென்னை மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட தமிழகத்துக்கான திட்டங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன. கடும் எதிர்ப்பு இருந்தும் சேலம் – சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்தை இந்த ஆண்டே செயல்படுத்தியே தீருவோம் என்று அறிவித்திருப்பது சரியானதல்ல.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா: பெருமுதலாளிகளுக்கு நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்து அதன் மூலம் அவர்கள் கொள்ளை லாபம் ஈட்ட உதவும் வகையில் தான் பட்ஜெட் அமைந்துள்ளது. கரோனா பேரிடரால் மக்களுக்கு ஏற்பட்ட துயரங்களை நீக்க பட்ஜெட்டில் எதுவும் இல்லை. ஏழை, நடுத்தர மக்களின் நலன் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்புக்கு உள்ளாக்கும் நோயை கண்டுபிடிக்காமல் தவறான மருந்தை அளிக்கும் மோசமான பட்ஜெட் இது.

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: மத்திய பட்ஜெட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் 5 மாநில மக்களையும் மகிழ்ச்சிப் படுத்துவதற்காக சில அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை காப்பாற்றுவதற்கான அறிவிப்புகள் ஏதும் இல்லாதது வேதனையளிக்கிறது. மொத்தத்தில்பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தென்படவில்லை.

இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து: மத்திய பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்ற அறிவிப்பை சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும். விவசாயிகளின் அச்சத்தைப் போக்கும் வகையில் செயல் திட்டங்களை கொண்டுவர வேண்டும். விவசாய பம்புசெட்டுகள், குடிசை வீடுகளுக்கான இலவச மின்சாரத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில் புதிய மின் விநியோகத் திட்டம் அமைய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x